UPDATED : மே 08, 2026 04:06 PM
ADDED : மே 08, 2026 04:00 PM

மேற்கூரையில் ரீஇன்போர்ஸ்மென்ட்(இரும்பு கம்பி) வெளியில் தெரிகிறது என்பது சாதாரண பிரச்னை அல்ல. இதை கட்டமைப்பு சார்ந்த பிரச்னை என்பார்கள். சிமென்ட் பூச்சு அல்லது பட்டி பார்த்தாலோ சரியாகாது. இதற்கான வரைமுறைகள் கொண்டு கையாள்வது சிறந்தது.
மேல் மாடியில் இருந்து தண்ணீர் கசிவு இதற்கு பிரதானமாக அமைகிறது. பழைய கட்டடம் அல்லது வீட்டின் ஆயுள் காலம் அதிகமாக இருந்தால் இரும்பு துரு பிடித்து இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
முதலில் தண்ணீர் கசிவை சரி செய்யாமல் பழுது பார்த்தால் மீண்டும் சேதம் ஏற்படும். மொட்டை மாடியில் அல்லது கூரை மேல் கழிப்பறை இருந்தால் அதை வாட்டர் புரூபிங் செய்ய வேண்டும். அதற்கு பிறகுதான் கீழே கம்பி தெரியும் கூரைகள் பழுது பார்க்க வேண்டும்.
சேதமான கான்கிரீட்டை முதலில் அகற்ற வேண்டும். அதாவது, வலிமையான கான்கிரீட் வரைக்கும் அகற்ற வேண்டும். இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இரும்பு கம்பியை ஸ்டீல் பிரஷ் அல்லது சேண்ட் பேப்பர் கொண்டு நன்றாக சுத்தம் செய்து துருவை அகற்ற வேண்டும்.
பின்பு அதன் மேல் துரு எதிர்ப்பு கோட்டிங் அடிக்க வேண்டும். பிணைப்பு அமிலம் பயன்படுத்த வேண்டும். மைக்ரோ கான்கிரீட் எனப்படும் சிமென்ட், பாலிமர்கள் மற்றும் சிறப்பு சேர்க்கைகள் கலந்த ஒரு நவீன, மெல்லிய பூச்சு பொருளை தண்ணீரில் பதத்தில் கலந்து ஆழமாக இருக்கும் பழுதான கான்கிரீட் கூரையில் மெத்த வேண்டும்.
காய்ந்தவுடன் 1:4 விகிதத்தில் சிமென்ட் மற்றும் மணல் கொண்டு எஸ்.பி.ஆர்., லேடெக்ஸ் கெமிக்கல் சேர்த்து பூச்சு பார்க்க வேண்டும். அதன் பிறகு ஏழு நாட்கள் கட்டாயமாக பழுது பார்த்த இடத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
இம்முறையை கையாண்டால், கூரை வலு பெறுவதோடு நீண்ட காலம் நீடித்து இருக்கும். கூரையின் நிலைமையை பார்த்து செக்சன் மற்றும் கம்பி வெல்டிங் செய்து பழுது பார்க்கும் முறைகளும் உண்டு.
- அரவிந்த்பாபு
'காட்சியா' உறுப்பினர்
