/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புத்தக கண்காட்சியில் திருவிழா கூட்டம்!
/
புத்தக கண்காட்சியில் திருவிழா கூட்டம்!
ADDED : ஜூலை 25, 2025 09:29 PM

கோவை; கோவை கொடிசியாவில் நடக்கும் புத்தக கண்காட்சியை, 7 நாட்களில் 50 ஆயிரம் வாசகர்கள் பார்வையிட்டு, புத்தகங்களை வாங்கி சென்றுள்ளனர்.
கோவை மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை மற்றும் கொடிசியா இணைந்து நடத்தும் புத்தகத்திருவிழா, கொடிசியா வணிக வளாகத்தில் நடந்து வருகிறது.
இந்த புத்தக கண்காட்சியில், 300 க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் பல லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் முன்னணி பதிப்பகங்கள் பங்கேற்றுள்ளன.தினமும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டு, புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.இந்த முறை, குடும்பத்துடன் புத்தக கண்காட்சிக்கு வந்தவர்கள் அதிகம். இந்த, 7 நாட்களில் 50 ஆயிரம் வாசகர்கள் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு, இருப்பதாக, கண்காட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இங்கு வாங்கும் நுால்களுக்கு, 10 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பல ஆங்கில கதை புத்தகங்கள் மலிவு விலையில் 99 ரூபாய்க்கு கிடைக்கின்றன.
இன்னும் இரண்டு நாட்களில், இந்த புத்தக கண்காட்சி நிறைவு பெற இருப்பதால் இன்றும், நாளையும் பல ஆயிரம் பேர் வருவார்கள் என,பதிப்பாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பொதுமக்கள் கோரிக்கை
புத்தக கண்காட்சிக்கு பஸ்சில் வரும் பொதுமக்கள், அவிநாசி ரோட்டில் இருந்து கொடிசியா அரங்கத்துக்கு ஒரு கிலோ மீட்டர் துாரத்துக்கு மேல் நடந்து செல்ல வேண்டியிருப்பதால், குழந்தைகளை அழைத்து வருபவர்கள், வயதானவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு 7:00 மணிக்கு மேல் அந்த பகுதி, இருட்டாகி விடுவதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
இதனால், புத்தக கண்காட்சி முடியும் வரை கொடிசியாவுக்கு, சிறப்பு பேருந்து இயக்க வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.