ADDED : ஜூன் 02, 2026 11:43 PM
கோவை: பருத்தி இறக்குமதி வரி குறித்து ஒரு பார்முலாவை உருவாக்க வேண்டும் என, தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சிஸ்பா) மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
சங்கத் தலைவர் அருண் கார்த்தி அறிக்கை:
சிறு, நடுத்தர நூற்பாலைகள், பருத்தி விலை ஏற்ற, இறக்கங்களால் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன.
பருத்தி உற்பத்தி, தரம், கிடைக்கும் அளவு, சர்வதேச சந்தை விலை ஆகியவற்றில் நிலவும் வேறுபாடுகளால், நுாற்பாலைகளின் மூலப்பொருள் செலவு கணிசமாக அதிகரிக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு, பருத்தி இறக்குமதி வரியை அவ்வப்போது விதிப்பதும், தற்காலிகமாக நீக்குவதுமாக உள்ளது. இது, பருத்தியின் சந்தை விலை நிலைத்தன்மையை பாதிக்கிறது. பஞ்சு வியாபாரிகள் மற்றும் கையிருப்பு வைத்திருப்போர் இச்சூழலைப் பயன்படுத்தி விலையை உயர்த்த ஏதுவாகிறது.
பெரிய நிறுவனங்களைப் போல, நீண்ட கால இருப்பை பேண முடியாத சிறு நூற்பாலைகள், அன்றாட தேவைக்கு கொள்முதல் செய்கின்றன. விற்பனையும் உள்நாட்டு சந்தையிலேயே இருக்கிறது. ஏற்றுமதி செய்வதில்லை.
எனவே, ஜவுளித் துறையின் நீண்ட நலனைக் கருத்தில் கொண்டு, பஞ்சு இறக்குமதிமீதான 11 சதவீத வரி தொடர்பான நிரந்தர, தெளிவான கொள்கையை அறிவிக்க வேண்டும்.
உள்நாட்டு விலை, சர்வதேச விலைக்கு இடையே அதிக வேறுபாடு ஏற்பட்டால், தானாகவே வரி விலக்கு அமலுக்கு வரும் வகையில் ஒரு பார்முலா அடிப்படையிலான நடைமுறையை உருவாக்க வேண்டும்.
இந்திய பருத்திக் கழகம் மற்றும் சார்ந்த அமைப்புகள் வெளிப்படையான சந்தை தலையீட்டு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
