/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒற்றை யானை தாக்கியதில் பாட்டி, பேத்தி உயிரிழப்பு
/
ஒற்றை யானை தாக்கியதில் பாட்டி, பேத்தி உயிரிழப்பு
ADDED : அக் 13, 2025 11:38 PM

வால்பாறை: வால்பாறை அருகே யானை தாக்கி பாட்டி, பேத்தி பலியாகினர்.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த வாட்டர்பால்ஸ் உமையாண்டி முடக்கு, காடம்பாறை டிவிஷனில் தொழிலாளியாக பணிபுரிபவர் மாரிமுத்து. இவரது மனைவி, இரண்டு குழந்தைகள், தாய் ஆகியோருடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானை, வீட்டின் ஜன்னலை உடைத்தது. அப்போது, 3 வயது பேத்தி ஹேமாஸ்ரீயுடன், பாட்டி அசாலா, 55, வெளியே எட்டி பார்த்த போது, மூதாட்டியை யானை தாக்கியது.
இந்த சம்பவத்தில், கீழே விழுந்த ஹேமாஸ்ரீயை யானை மிதித்து கொன்றது. படுகாயமடைந்த மூதாட்டி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.
வால்பாறை வன ஊழியர்கள், பாட்டி, பேத்தி உடல்களை, வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இதனிடையே, விலங்கு - மனித மோதலை தடுக்க வேண்டும்; கும்கியை பயன்படுத்தி அப்பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை யானையை பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும்; கூடுதல் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என, பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், தொழிலாளர்கள் நேற்று மாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், தொழிலாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்தனர். உயிரிழந்த குழந்தையின் குடும்பத்துக்கு, வனத்துறை 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கியது.