/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை அறிவுரை
/
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை அறிவுரை
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை அறிவுரை
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை அறிவுரை
ADDED : பிப் 03, 2025 05:00 AM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு வட்டாரத்தில் தென்னையில் ஏற்படும் நோயை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
கிணத்துக்கடவு வட்டாரத்தில், 13 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை விவசாயம் உள்ளது. இதில், சுருள் வெள்ளை ஈ பூச்சித்தொல்லை பரவலாக உள்ளது. இதனால், தென்னை விவசாயம் பாதிக்கப்படுவதுடன், தென்னையில் இருந்து மதிப்பு கூட்டு பொருள் தயாரிப்பு பாதிக்கப்படுகிறது.
சுருள் வெள்ளை ஈ பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, கிணத்துக்கடவு தோட்டக்கலைத்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதில், வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த தென்னந்தோப்புகளில் ஏக்கருக்கு, 2 விளக்குப்பொறிகள் வைக்க வேண்டும். மஞ்சள் நிற ஒட்டுப்பொறி ஏக்கருக்கு, 10 வீதம், 6 அடி உயரத்தில் தொங்கவிட்டு கட்டுப்படுத்தலாம்.
வெள்ளை ஈக்களின் இளங்குஞ்சுகளை என்கார்சியா என்ற ஒட்டுண்ணி குளவியை ஏக்கருக்கு 10 இலை துண்டுகள் வீதம், தாக்கப்பட்ட ஓலைகள் மீது, 10 மரத்துக்கு இடைவெளியில் வைத்து கட்டுப்படுத்தலாம்.
வெள்ளை ஈ தாக்குதலின் போது, செயற்கை மற்றும் ரசாயன பூச்சிக்கொல்லியை பயன்படுத்தக் கூடாது. பூச்சி தாக்குதல் அதிகளவில் இருந்தால், வேப்ப எண்ணெய் 30 மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, 1 மில்லி ஒட்டும் திரவத்துடன் தென்னை ஓலையின் அடிப்பகுதியில் ஒரு முறை மட்டும் தெளிக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.