/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விசைத்தறி தொழிலுக்கு கூட்டு கமிட்டி இருந்தால் வளர்ச்சிக்கு வழி! ஜவுளி தொழில் முனைவோர் எதிர்பார்ப்பு
/
விசைத்தறி தொழிலுக்கு கூட்டு கமிட்டி இருந்தால் வளர்ச்சிக்கு வழி! ஜவுளி தொழில் முனைவோர் எதிர்பார்ப்பு
விசைத்தறி தொழிலுக்கு கூட்டு கமிட்டி இருந்தால் வளர்ச்சிக்கு வழி! ஜவுளி தொழில் முனைவோர் எதிர்பார்ப்பு
விசைத்தறி தொழிலுக்கு கூட்டு கமிட்டி இருந்தால் வளர்ச்சிக்கு வழி! ஜவுளி தொழில் முனைவோர் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 25, 2025 06:23 AM

சூலுார்; ஜவுளி தொழில் மேம்பாட்டுக்காக, விசைத்தறி தொழில் வளர்ச்சிக் கமிட்டி அமைக்க வேண்டும்,என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஸ்பின்னிங் மற்றும் விசைத்தறி ஜவுளி தொழில் பிரதானமாக உள்ளது. நூல் ரகங்கள் மற்றும் துணி ரகங்கள் உற்பத்தி அதிகம் உள்ள பகுதியாகும். சார்பு தொழில்களாக, பஞ்சு விற்பனை, சைசிங் தொழில், துணி ரகங்கள் விற்பனை ஆகியன உள்ளன. இத்துறையினால், பல லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இத்தொழில்கள் ஒவ்வொன்றும் மற்றொன்றை சார்ந்து உள்ளதால், அனைத்தும் சீராக நடந்தால் தான் சந்தை நிலவரம் நன்றாக இருக்கும். பஞ்சு விலை ஏறினால், நூல் ரகங்கள் உற்பத்தி குறையும். நூல் ரகங்கள் விலை ஏறினால், துணி ரகங்கள் விலையும், உற்பத்தியும் குறையும். இதனால், சந்தை நிலவரம் எப்போதும் நிலைத்தன்மை இல்லாமல் இருப்பது வாடிக்கையாக உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, மின் கட்டண உயர்வு, தொழிலாளர் சம்பளம், போக்குவரத்து செலவு, உதிரிபாகங்கள் செலவு, ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களாலும் விசைத்தறி ஜவுளி தொழில் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
தொழிலில் உள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண, பொதுவான அரசு அமைப்பு ஒன்று தேவை என்பது, தொழில்துறையினர் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து விசைத்தறி ஜவுளி தொழில் முனைவோர்கள் கூறியதாவது:
விசைத்தறி ஜவுளி தொழில் நாளுக்கு நாள் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அளவுக்கு அதிகமான உற்பத்தி காரணமா அல்லது போட்டிகள் அதிகரித்துள்ளதால் ஏற்பட்டு வரும் வீழ்ச்சியா, மூலப்பொருட்களின் விலையில் உள்ள ஏற்ற, இறக்கங்கள் காரணமா என, குழம்பிக்கொண்டிருக்க வேண்டிய சூழல் தான் தினமும் உள்ளது.
எங்கள் பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பது அவசர அவசியமாக உள்ளது. அதற்கு பொதுவான அமைப்பு ஒன்று இருக்க வேண்டும் என்பது எங்கள் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் இத்தொழிலுக்கு என, தனியாக விசைத்தறி தொழில் வளர்ச்சி கமிட்டி அமைக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். அதில், விசைத்தறி ஜவுளி துறையினர், மத்திய, மாநில அரசின் ஜவுளி துறை அதிகாரிகள், வல்லுனர்கள் ஆகியோர் இடம் பெற வேண்டும்.
அப்போதுதான் எங்கள் பிரச்னைகள் உடனுக்குடன் பேசி தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அந்த கமிட்டியினர் கூடி, என்ன பிரச்னைகள் உள்ளன, அவற்றுக்கான தீர்வுகள் எவை என விவாதித்து தீர்வை கூறி, நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அப்போதுதான் பிரச்னைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டு, தொழில் சீராக நடக்க வழிவகை கிடைக்கும். இதுகுறித்து மத்திய நிதி அமைச்சரிடம் விளக்கி கூறி மனு அளித்துள்ளோம். நல்ல முடிவு வரும் என எதிர்பார்ப்பில் உள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.