/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இப்படி இருந்தா... எப்படி பயணிப்பது!
/
இப்படி இருந்தா... எப்படி பயணிப்பது!
ADDED : ஏப் 09, 2025 10:24 PM

கணேஷ், பொள்ளாச்சி: டவுன் பஸ்சில் பயணிக்கும்போது, பழுது ஏற்பட்டால் நடுவழியிலேயே நிறுத்தப்படுகிறது. தடதட சப்தத்துடன் இயங்கும் டவுன் பஸ்களில் பயணிக்கும் போது, படபடப்பு ஏற்படுகிறது. பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படும் அரசு பஸ்களால், கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கின்றனர். ெஹட்லைட் வெளிச்சம் இல்லாதது, வைபர் பழுது, இருக்கைகள் சேதம் என, அரசு பஸ்கள் கேட்பாரற்று உள்ளன. பழுதடையும் உபகரணங்களை புதிதாக மாற்ற வேண்டும். அதனை சீரமைத்து உபயோகம் செய்யக் கூடாது.
பிரகாஷ், கிணத்துக்கடவு: அரசு டவுன் பஸ்கள் முன்பு இருந்ததை காட்டிலும், தற்போது பரவாயில்லை. இருந்தாலும் ஒரு சில பஸ்களில் படிகளில் இருக்கும் தகரம் உடைந்து காயம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அரசு பஸ்சில் தனியார் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதை பார்ப்பதற்கு அரசு பஸ்சா அல்லது தனியார் பஸ்சா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதற்கு பதிலாக, அரசு விளம்பரங்கள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டலாம்.
விஜயராகவன், உடுமலை: அரசு பஸ்களில் தற்போது கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பல பஸ்களில் கதவுகள் சரியாக திறப்பதும் இல்லை, பயணியர் ஏறும் போது பாதியில் மூடிக்கொள்கின்றன. இதனால் தடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது. இருக்கைகளுக்கு இடையில் இடவசதி மிகவும் குறுகலாக உள்ளது. முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை.
சிவமணி, மடத்துக்குளம்: அரசு பஸ்கள் பலவற்றில் படிகட்டுகள் மிகவும் உயரமாக உள்ளது. முதியவர்கள் ஏறுவதற்கு சிரமப்படுகின்றனர். பஸ்சின் மேற்கூரைகள் ஓட்டையாக இருப்பதால், மழை பெய்யும் போது, பயணம் செய்ய முடிவதில்லை. குறிப்பாக, கிராமப்பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் தான் இவ்வாறு உள்ளன. பஸ்களில் ஜன்னல் கதவுகளும் சரியாக இருப்பதில்லை. பஸ் வேகமாக செல்லும்போது ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து விடும் வகையில் கடகடனெ ஆடி அச்சுறுத்துகின்றன.
சக்திவேல், சோலையாறு எஸ்டேட்: வால்பாறை மலைப்பகுதியில் காலாவதியான பஸ்கள் தான் அதிகம் இயக்கப்படுகின்றன. மழை காலங்களில் மேற்கூரை ஒழுகுவதால், குடை பிடித்து செல்ல வேண்டி உள்ளது. பெரும்பாலான பஸ்களில் பராமரிப்பு முறையாக செய்யாததால், பஸ் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நிற்கிறது. பஸ்களில் இருக்கைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. பயணியர் நலன் கருதி, மேற்கூரையை சீரமைக்க வேண்டும்.