/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைகள் மத்தியில் டைப் 1 சர்க்கரை அதிகரிப்பு! தயாராகும் சிகிச்சை முறை வழிகாட்டுதல்
/
குழந்தைகள் மத்தியில் டைப் 1 சர்க்கரை அதிகரிப்பு! தயாராகும் சிகிச்சை முறை வழிகாட்டுதல்
குழந்தைகள் மத்தியில் டைப் 1 சர்க்கரை அதிகரிப்பு! தயாராகும் சிகிச்சை முறை வழிகாட்டுதல்
குழந்தைகள் மத்தியில் டைப் 1 சர்க்கரை அதிகரிப்பு! தயாராகும் சிகிச்சை முறை வழிகாட்டுதல்
ADDED : ஏப் 18, 2025 06:35 AM

கோவை : குழந்தைகள் மத்தியில் டைப் 1 சர்க்கரை பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், தேசிய சுகாதார இயக்ககத்தின் கீழ், 'விரைவில் நிலையான சிகிச்சை முறை வழிகாட்டுதல்' செயல்படுத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் டைப்1 சர்க்கரை பாதிப்பினால், 2600 குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில், 80 குழந்தைகள் சிகிச்சை பெறுகின்றனர். இப்பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் சூழலில், மத்திய, மாநில அரசுகள் தனிகவனம் செலுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
டைப்1 சர்க்கரை பாதிப்பு என்பது கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் பகுதியில், செல்கள் மெதுவாக பாதிக்கப்படுகிறது. 80 சதவீதம் செல்கள் பாதிக்கப்பட்ட பின்னரே நோயின் தன்மை வெளிப்படுகிறது.
சுற்றுச்சூழல், மரபணு, வைரஸ் பாதிப்பு, அதிக மனஅழுத்தம் போன்றவை இப்பாதிப்புக்கு காரணியாக இருக்கலாம் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வகை பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் முறையான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளவேண்டியது கட்டாயம். இன்சூலின் ஊசி அல்லது மருந்துகளை தினந்தோறும் எடுத்துக்கொள்வது அவசியம்.
இதுகுறித்து, அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவு துறைத்தலைவர் டாக்டர் சசிக்குமார் கூறியதாவது:
இன்சுலின் சுரப்பி குறைபாடு காரணமாக டைப்1 சர்க்கரை பாதிப்பு ஏற்படுகிறது. கோவை அரசு மருத்துவமனையில் மட்டும், 80 குழந்தைகள் இதற்கான சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பாதிப்புடன் வரும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதிக தாகம், அதிகம் சிறுநீர் கழித்தல், அதிக பசி, எடை குறைதல், உடல் சோர்வு, அடிக்கடி சிறுநீர் பாதை தொற்றுகள், வழக்கத்தை காட்டிலும் மூச்சு வாங்குதல், வயிற்றுவலி போன்றவை இதன் அறிகுறிகள். பெற்றோர் கவனமுடன் உடனடியாக சிகிச்சைக்கு அழைத்துவரவேண்டும். பலர் கோவில், ஆன்மிகம், இயற்கை வைத்தியம் என சென்று உடல் மோசமான நிலையில் சிகிச்சைக்கு அழைத்து வருகின்றனர்.
இக்குழந்தைகளுக்கு, இனிப்புகள் , குளிர்பானங்கள் , சர்க்கரை, உருளைக்கிழங்கு , மாம்பழம் , பலாப்பழம், சாஸ், ஜாம், துரித உணவுகளை தவித்து, சத்தான காய்கறிகள், கீரைகள், வேர்க்கடலை, பாசிப்பயறு, கேழ்வரகு, கொய்யாக்காய், முலாம்பழம், முட்டைகோஸ், மற்றும் வயதுக்கு ஏற்ப புரதச்சத்து உணவுகளை கொடுக்கவேண்டும்.
இப்பாதிப்புள்ள குழந்தைகளுக்கு முறையான சிகிச்சை இல்லை எனில்,கண், நரம்பு, கிட்னி பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது. ஹைப்போ தைராய்டிசம் மற்றும் சீலியாக் மற்றும் பிற ஆட்டோ இம்யூன் பாதிப்புகள் வரலாம்.பெற்றோர் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். முறையான சிகிச்சை இருந்தால் இக்குழந்தைகள் பிறரை போல் இயல்பான வாழ்க்கை வாழமுடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதயங்கள் அறக்கட்டளை தலைவர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் கூறுகையில், '' டைப்1 சர்க்கரை பாதிப்பு குழந்தைகள் மத்தியில் ஆண்டுதோறும், 5 சதவீதம் அதிகரித்து வருகிறது.
அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் தமிழகத்தில், 8000- 10,000 குழந்தைகள் இப்பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இக்குழந்தைகள் வாழ்நாள் முழுவதும், தினந்தோறும் 4 வேளை இன்சூலின் ஊசி செலுத்திக்கொள்ளவேண்டும். ஒரு வேளை தவறினாலும் கோமா பாதிப்புக்கு சென்றுவிடுவார்கள். சரியான சிகிச்சை இல்லையெனில், 15 வயதில் கிட்னி, கண் பாதித்துவிடும். அரசின் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் இதயம் அறக்கட்டளை இணைந்து இதுபோன்ற குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்,'' என்றார்.