/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாயை பிரிந்த குட்டி யானை உயிரோடு இருக்கிறதா? வனத்துறையினர் 'திருதிரு'
/
தாயை பிரிந்த குட்டி யானை உயிரோடு இருக்கிறதா? வனத்துறையினர் 'திருதிரு'
தாயை பிரிந்த குட்டி யானை உயிரோடு இருக்கிறதா? வனத்துறையினர் 'திருதிரு'
தாயை பிரிந்த குட்டி யானை உயிரோடு இருக்கிறதா? வனத்துறையினர் 'திருதிரு'
ADDED : மே 23, 2025 11:55 PM

வடவள்ளி: மருதமலை அடிவாரத்தில், தாயை விட்டு பிரிந்து வனப்பகுதிக்குள் சென்ற குட்டியானை, தற்போது வரை எங்குள்ளது என்பது தெரியாமல் விழிக்கின்றனர் வனத்துறையினர். தவறான சிகிச்சை முறையால் ஏற்கனவே தாய் இறந்து விட்ட நிலையில், குட்டியையாவது பத்திரமாக காப்பாற்ற வேண்டும் என்கின்றனர் கானுயிர் ஆர்வலர்கள்.
கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட மருதமலை அடிவாரத்தில், வனப்பகுதியை ஒட்டிய நிலத்தில், கடந்த 17ம் தேதி மாலை, ஒரு பெண் யானை உடல் நலக்குறைவு ஏற்பட்டு கீழே விழுந்தது. அதற்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முயன்ற போது, பெண் யானையின், சுமார், 2 வயது ஆண் குட்டி யானை, வனத்துறையினரை விரட்டியது. அதனால் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
எழ முடியாமல் படுத்துக்கிடந்த தாயை எழுப்ப, பெரும் பாசப்போராட்டத்தையே குட்டி யானை நடத்தியது. மறுபுறம், சிகிச்சை அளிக்க வனத்துறையினரையும் நெருங்க விடவில்லை.
இதனையடுத்து, மாங்கரையில் இருந்த ஒரியன் என்ற கும்கியை, வனத்துறையினர் வரவழைத்தனர். கும்கி வந்ததும், அதனை கண்டு பயந்து, குட்டியானை அருகிலிருந்த வனப்பகுதிக்குள் ஓடியது.
ட்ரோன் பயன்படுத்தி தேடல்
அதன் பின்பே, வனத்துறையினர் பெண் யானைக்கு சிகிச்சையை துவக்கினர். இதன்பின், வனத்திற்குள் சென்ற குட்டி யானையை, கண்காணிக்க குழுவையும் வனத்துறையினர் அமைத்திருந்தனர். ஆனால், அக்குழுவினர் கண்களுக்கு குட்டி யானை தென்படவில்லை.
தாயை தேடி எப்படியும், குட்டி யானை வரும் என, வனத்துறையினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இறுதிவரை குட்டியானை வரவில்லை. அதற்குள், சிகிச்சை பலனின்றி பெண் யானை உயிரிழந்தது.
இந்நிலையில், வனத்துக்குள் சென்ற குட்டியானை எங்குள்ளது என்பது குறித்தறிய, 'மோஷன் சென்சார் ட்ரோன்' பயன்படுத்தி, வனத்துறையினர் தேடினர். ஆனால், அதிலும் நேற்று மாலை வரை குட்டி யானை தெரியவில்லை. இதனால், குட்டி யானை எங்குள்ளது, எப்படி உள்ளது என்ற கலக்கம் ஏற்பட்டுள்ளது.
காலில் கயிறு
தாயுடன் குட்டியானை இருந்தபோது, குட்டியானையின் பின்புற ஒற்றை காலில், அதனை கட்டுப்படுத்த வனத்துறையினர், ஒரு கயிற்றை கட்டியிருந்தனர். கும்கியை கண்டு குட்டியானை வனத்திற்குள் செல்லும்போதும், கயிற்றோடுதான் சென்றது.
அந்த கயிறு கழன்று விழுந்ததா, இன்னும் அதன் காலிலேயே உள்ளதா, அவ்வாறு காலில் இருந்தால், அந்த கயிறு காட்டில் எங்காவது சிக்கி, குட்டியானைக்கு சிரமம் ஏற்பட்டிருக்குமா என்ற பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.
ஐந்து கால்நடை மருத்துவர்கள் இருந்தும், தாய் யானையை அதன் சிசுவுடன் காப்பாற்ற முடியாமல் போன வனத்துறையினர், மாயமான குட்டியானையையாவது பத்திரமாக மீட்க வேண்டும் என்பதே, கானுயிர் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பிரார்த்தனை.