கிணத்துக்கடவு ஒன்றிய குடிநீர் பிரச்னைக்கு... தீர்வு கிடைக்குமா? தனி திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
கிணத்துக்கடவு ஒன்றிய குடிநீர் பிரச்னைக்கு... தீர்வு கிடைக்குமா? தனி திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
UPDATED : ஜூன் 22, 2026 06:10 PM
ADDED : ஜூன் 22, 2026 06:04 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ஒன்றியத்தில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண, தனி குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள, 34 ஊராட்சிகளில், 85 கிராமங்கள் உள்ளது. இதில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு, அம்பராம்பாளையம் மற்றும் சூளேஸ்வரன்பட்டி என, இரண்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக, 2011ம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படையில் இன்று வரை குடிநீர் வழங்கப்படுகிறது.
சில நேரங்களில், மின்வெட்டு, ரோடு சீரமைப்பின் போது குழாய் சேதமடைதல் உள்ளிட்ட, 2011ல் வழங்கப்பட்ட குடிநீரின் அளவுவை விட குறைவாகவே மக்களுக்கு கிடைக்கிறது. நாள் ஒன்றுக்கு, ஒரு நபருக்கு, 55 லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும்.
காட்டம்பட்டி, பனப்பட்டி, வடசித்தூர், காரச்சேரி, கப்பளாங்கரை உள்ளிட்ட பல ஊராட்சிகள் கடை மடையாக இருப்பதால் இப்பகுதி மக்களுக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை, நபர் ஒன்றுக்கு, 35 லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு சில கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் இல்லை.
இதனால், மக்கள் பலர் காசு கொடுத்து கேன் தண்ணீர் வாங்கி பருகும் நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படும் போர்வெல் மற்றும் பொதுக்கிணறு தண்ணீரையே குடிக்கும் நிலை உள்ளது. இதனால், அவ்வப்போது சில இடங்களில் சாலை மறியலில் மக்கள் ஈடுபடுகின்றனர். ஒன்றிய அதிகாரிகளும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் இந்த பிரச்னையை தற்காலிகமாகவே தீர்த்து வைத்துள்ளனர்.
தற்போது, கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில் முக்கிய இடங்களில் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்கள் அதிகரிப்பால், மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால், கிராம பகுதியில் உள்ள மக்கள் சிலர், நகர் பகுதிக்கு செல்ல துவங்கி உள்ளனர். கிராமங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை கணிசமாக குறைவதுடன், மக்களுக்கு பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, கிராம மக்கள் இடம்பெயர்ந்து செல்வதை தவிர்க்கவும், குடிநீர் தேவையை வழங்கவும் அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:
கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 30 ஆண்டுகளாகவே குடிநீர் பிரச்னை உள்ளது. இதை சரி செய்ய தனி குடிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும்.
இதற்கு, அம்பராம்பாளையத்தில் இருந்து நேரடியாக தண்ணீர் எடுத்து ஆத்துப்பொள்ளாச்சி, மண்ணுார், கைகாட்டி, மாப்பிள்ளைக்கவுண்டன்புதூர், வடக்கிபாளையம், மேட்டுப்பாளையம், கப்பளாங்கரை, வடசித்தூர் வழியாக குழாய் பதித்து, புதிதாக நீருந்து நிலையம் அமைக்க வேண்டும். இத்திட்டத்துக்கு 25 கோடி ரூபாய் வரை செலவு ஏற்படும் என, திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு கால அவகாசம் தேவைப்படும். ஆனால் அரசுடன், தன்னார்வ அமைப்புகள், என்.ஜி.ஓ., அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் என, சி.எஸ்.ஆர்., நிதியில் இருந்து பங்களிப்பை வழங்கினால், விரைவில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி, பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இதனால், பெரும்பாலான கிராமங்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் இடைவெளியில் குடிநீர் வழங்கலாம்.
இவ்வாறு, கூறினார்.
