/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அது வேறு ஒரு உலகத்துக்கு கூட்டிச்செல்லும்!
/
அது வேறு ஒரு உலகத்துக்கு கூட்டிச்செல்லும்!
ADDED : டிச 14, 2025 05:08 AM

''அ றிவு வளர வேண்டுமா... புத்தகம் வாசியுங்கள். தொடர்ந்து வாசிக்க வேண்டுமா... நுாலகத்தை பயன்படுத்துங்கள்,'' என்கிறார், 82 வயதான பழனிசாமி.
மொபைல் போனில் ரீல்ஸ் பார்ப்பதை விட்டு, நுாலகம் செல்லுங்கள் என்கிறார் இவர். இருகூரை சேர்ந்த இவர், 18 வயதில் இருந்தே, வாசிப்பை வழக்கமாக்கிக் கொண்டார்.
இருகூரில் பகுதி நேர நுாலகமாக இருந்த போதும், முழு நேர நுாலகமாக மாறிய போதும், வாசிப்புதான் இவருக்கு சுவாசம். இப்போது முழு நேர நுாலகமாகி விட்ட நிலையிலும், முதல் உறுப்பினரும் இவர்தான். இருகூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1967ல் இருந்து 2002 வரை, எழுத்தராக பணிபுரிந்து கொண்டிருந்த போது, பள்ளி நுாலகத்தையும் பயன்படுத்தி வந்தார்.
எங்காவது வெளியூர் சென்றால் மட்டுமே, நுாலகத்துக்கு இவரால் செல்ல முடியாது. முடியாத நிலையில், தினமும் ஒரு 10 நிமிடங்களாவது நுாலகம் இவரை வரவேற்று விடும். அந்தளவுக்கு வாசிப்பின் மீது ஆர்வம் இருக்கிறது.
''ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது, படிப்பவரை வேறு உலகத்துக்கு இழுத்துச் சென்று விடுகிறது. வரலாறு உங்கள் பக்கத்தில் இருக்கும். அறியப்படாத பல விஷயங்களை அறிந்து கொள்வீர்கள்,'' என்கிறார் இவர்.
நுாலகத்தில் படிப்பதோடு மட்டுமல்லாமல், வீட்டுக்கும் புத்தகங்கள் எடுத்துச் சென்று படிக்கிறார். மகன், மகள், மனைவி, பேரன், பேத்தி ஆகியோரையும், நுாலகத்தில் உறுப்பினராக இணைத்துள்ளார். ''அவர்களும் என்னைப்போலவே வாசிப்பை நேசிக்கின்றனர்,'' என்று பெருமிதப்படுகிறார் பழனிசாமி.

