பூமார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு மக்கள் நடக்கவே இடமில்லை மறுபடியும் முதல்ல இருந்தா!
பூமார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு மக்கள் நடக்கவே இடமில்லை மறுபடியும் முதல்ல இருந்தா!
UPDATED : ஆக 22, 2026 06:37 PM
ADDED : ஆக 22, 2026 06:23 PM

கோவை: பூமார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கடைகள், வாகனங்களுக்கு இடையே நடக்கக்கூட முடியாமல் பொதுமக்கள் அவஸ்தைப்படுகின்றனர். நிரந்தர தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
பூ மார்க்கெட்டில் 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ரோட்டை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடை போடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மாநகராட்சி நிர்வாகம் கடந்தாண்டு ஆக்கிரமிப்பை அகற்றியது. அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால் மீண்டும் ரோட்டை ஆக்கிரமித்து கடை போட்டுள்ளனர். மார்க்கெட் உள்பகுதியிலும் நடைபாதையிலும் வியாபாரம் நடக்கிறது. மக்கள் மார்க்கெட்டில் நடப்பதே சிரமமாக உள்ளது.
கோவை மாநகர் மாவட்ட மலர் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் ரவிச்சந்திரன் கூறுகையில், ''193 கடைகள் மாநகராட்சியில் பதிவு செய்துள்ளோம். மாதா மாதம் மாநகராட்சிக்கு வாடகை கொடுக்கிறோம். 30க்கும் மேற்பட்ட கடைகள் ரோட்டையும், நடைபாதையையும் ஆக்கிரமித்துள்ளன.
தி.மு.க. ஆட்சியில் ரூ.1.40 கோடியில் மேம்படுத்தப்பட்ட மார்க்கெட்டால், பயன் இல்லை. ஆக்கிரமிப்பை அகற்றினாலும் 2 நாட்களில் கடை போடுகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்றி, மக்கள் சிக்கலின்றி பூ வாங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
லங்கர்கனா ரோட்டில் உள்ள கேட்டை நிரந்தரமாக மூட வேண்டும். மெயின் கேட்டில் 2 செக்யூரிட்டிகளை நியமித்து கண்காணிக்க வேண்டும்.
பயன்படுத்தப்படாமல் உள்ள நவீன பூ மார்க்கெட்டை புனரமைத்து அதில் கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும். அப்படி செய்தால் கடைகளுக்கு அதிக இடம் கிடைப்பதுடன் போக்குவரத்து நெரிசலும் குறையும்,'' என்றார்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 'பூ மார்க்கெட்டில் எத்தனை கடைகள் உள்ளன என சர்வே செய்து, உதவி நகரமைப்பு அலுவலர் மூலம் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு நோட்டீஸ் கொடுப்போம். ஆக்கிரமிப்பை அகற்றி மார்க்கெட்டை புனரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்,'' என்றார்.
ஆக்கிரமிப்பை அகற்றுவது ஒவ்வொரு முறையும் நடப்பதுதான். அது தொடராமல் இருக்க கண்காணிப்போ, நடவடிக்கையோ இல்லை. இனி அதுதான் வேண்டும்.
