/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டியில் 'கில்லி'
/
'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டியில் 'கில்லி'
'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டியில் 'கில்லி'
'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டியில் 'கில்லி'
ADDED : நவ 27, 2024 10:13 PM

கோவை; 'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட்டில் நேற்றைய காலிறுதி போட்டிகளில் துடிப்புடன் விளையாடிய கல்லுாரி மாணவர்கள் தங்களது அணிகளை அரையிறுதிக்கு அழைத்துசென்றனர்.
கோவை விழாவின், 17வது பதிப்பை முன்னிட்டு 'தினமலர்' நாளிதழ் மற்றும் 'லைகா கோவை கிங்ஸ்' சார்பில் 'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டி கடந்த, 22ம் தேதி துவங்கியது; நாளை நிறைவடைகிறது. 32 கல்லுாரி அணிகள் பங்கேற்ற நிலையில் நேற்றைய காலிறுதி போட்டிகளில் மாணவர்கள் துடிப்புடன் விளையாடினர்.
வட்டமலைபாளையம், ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி மைதானத்தில் நடந்த முதல் காலிறுதி போட்டியில், ராமகிருஷ்ணா கலை கல்லுாரியும், ராமகிருஷ்ணா வித்யாலயா மாருதி கல்லுாரியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராமகிருஷ்ணா கலைக் கல்லுாரி வீரர்கள், 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 169 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய மாருதி அணியினர், 19.5 ஓவரில், 130 ரன்களுக்கு 'ஆல் அவுட்' ஆகினர். எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் கல்வித்துறை இயக்குனர் அலமேலு, ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ராமகிருஷ்ணா வீரர் கிஷோருக்கு விருது வழங்கினார்.
இரண்டாம் காலிறுதியில், கே.பி.ஆர்.,-பி.எஸ்.ஜி., கல்லுாரிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கே.பி.ஆர்., அணி, 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 160 ரன்கள் எடுத்தது. பி.எஸ்.ஜி., அணியோ, 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. கே.பி.ஆர்., வீரர் அருண்குமாருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
எஸ்.என்.எம்.வி., கல்லுாரியில் நடந்த மூன்றாம் காலிறுதியில், எஸ்.டி.சி., - என்.ஜி.எம்., அணிகள் மோதின. பேட்டிங் செய்த எஸ்.டி.சி., அணி, 18.1 ஓவரில், 77 ரன்களுக்கு 'ஆல் அவுட்' ஆனது. என்.ஜி.எம்., அணியினர், 13.3 ஓவரில், 3 விக்கெட்டுக்கு, 78 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். வீரர் பிரேம் சங்கீத் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
நான்காம் காலிறுதி போட்டி, எஸ்.என்.எம்.வி.,-வி.எல்.பி., ஜானகியம்மாள் அணி இடையே நடந்தது. பேட்டிங் செய்த வி.எல்.பி., அணியினர், 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 135 ரன்கள் எடுத்தனர். எஸ்.என்.எம்.வி., அணியினர், 19.1 ஓவரில், 93 ரன்களுக்கு 'ஆல் அவுட்' ஆகினர். ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட வி.எல்.பி., வீரர் பாலதரனிற்கு, ஈஸ்வர் கல்லுாரி இயக்குனர் ராஜாராம் விருது வழங்கினார்.
இணைந்து வழங்குபவை
'தினமலர்' நாளிதழுடன் எஸ்.எஸ்.வி.எம்., நிறுவனங்கள், இந்துஸ்தான் நிறுவனங்கள், 'வால்ரஸ்' நிறுவனம், சுப்ரீம் மொபைல்ஸ் ஆகியன இணைந்து வழங்குகின்றன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அரையிறுதி போட்டிகளும், நாளை இறுதி போட்டியும் நடக்கிறது.
ரொக்கமும்; டிராபியும்!
வெற்றி பெறும் அணிகளுக்கு, முதல் நான்கு பரிசுகளாக, ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மற்றும் டிராபி வழங்கப்படுகிறது. மூன்று சிறந்த பவுலர்கள் 'லைகா கோவை கிங்ஸ்' அணியால் 'நெட் பவுலர்'களாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.