/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விட்டு கொடுத்து வாழ்ந்தால் அன்பு நிலைத்திருக்கும்
/
விட்டு கொடுத்து வாழ்ந்தால் அன்பு நிலைத்திருக்கும்
ADDED : அக் 21, 2025 10:05 PM

சூலுார்: ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து வாழ்ந்தால் வீட்டில் அன்பு நிலைத்திருக்கும், என, குடும்ப சங்கமம் நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி, சிவராம் ஜி சேவா டிரஸ்ட் சார்பில், பள்ளபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில் குடும்ப சங்கமம் நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடந்து வருகிறது. தீபாவளியன்று நடந்த நிகழ்ச்சியில், 60 குடும்பங்களை சேர்ந்த, 160 பேர் பங்கேற்றனர்.
கணபதி, மகாலட்சுமி பூஜையுடன் துவங்கிய நிகழ்ச்சியில், உலக நன்மை வேண்டி கோமாதா பூஜை நடந்தது. நமது குடும்பத்தின் பெருமை, பண்பாடு, குடும்பத்தின் வளர்ச்சியில் குடும்ப உறுப்பினர்களின் பங்கு, குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து வயது வாரியாக கலந்துரையாடல் நடந்தது.
' குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் விட்டு கொடுத்து வாழ்ந்தால், குடும்பத்தில் அன்பு நிலைத்திருக்கும். செல்போன், சினிமா, சீரியல் போன்றவற்றுக்கு அடிமையாகி விடாமல் குழந்தைகளை வளர்க்க வேண்டும். சவால்களை எதிர்கொள்ள வும், தன்னம்பிக்கையை மேம்படுத்தவும் பயிற்சிகளை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்,' என, நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.
கொங்கு மண்டல ஜீயர் ஸ்ரீ ஸ்ரீ நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள், ராமகிருஷ்ண ஆசிரமம் ஆத்மராமானந்த சுவாமிகள், சமூக சேவகர் ஸ்ரீ ராம் ஆகியோர் பங்கேற்று ஆசி வழங்கினர்.