/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகரஜோதி தரிசன ஏற்பாடுகள் தயார்!
/
மகரஜோதி தரிசன ஏற்பாடுகள் தயார்!
UPDATED : ஜன 13, 2024 07:38 AM
ADDED : ஜன 13, 2024 07:36 AM

மூணாறு: சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக இடுக்கி கலெக்டர் ஷீபாஜார்ஜ் தெரிவித்தார்.
சபரிமலையில் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் ஜன.15 ல் நடக்கிறது. கேரளா இடுக்கி மாவட்டத்தில் வண்டிபெரியாறு அருகே சத்திரம் புல்மேடு வழியாக நடந்தும், குமுளி வழியாக வாகனங்களிலும் சபரிமலைக்கு செல்லலாம் என்பதால் மாவட்டத்தில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து இடுக்கி கலெக்டர் ஷீபாஜார்ஜ் நேற்று குமுளியில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இடுக்கி எஸ்.பி.விஷ்ணுபிரதீப், சப் கலெக்டர் அருண் எஸ்.நாயர், வனத்துறை உதவி இயக்குனர் ஹரிகிருஷ்ணன், அதிகாரிகள் பங்கேற்றனர். மகரஜோதி தரிசனம் காண புல்மேடு, பருந்துபாறை, பாஞ்சாலிமேடு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பிற்கு 1400 போலீஸ்
தேர்வு செய்யப்பட்ட பல்வேறு பகுதிகளில் 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.வல்லக்கடவு முதல் புல்மேடு டாப் வரை சுகாதார துறை சார்பில் ஒவ்வொரு இரண்டு கி.மீ. தொலைவில் ஐ.சி.யு. ஆம்புலன்ஸ், மருத்துவ குழு வசதிகள், குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளன.
விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் தகவல்கள் அறிவிக்கப்படும்.
புல்மேடு டாப்பில் நாளை மறுநாள் மட்டும் பி.எஸ். என். எல்., சார்பில் தற்காலிக தொலை தொடர்பு வசதிசெய்யப்படும்.
கூடுதல் பஸ் வசதி
குமுளியில் இருந்து கேரள அரசு பஸ்கள் மதியம் ஒரு மணி வரை இயக்கப்படும். 65 சர்வீஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ள நிலையில் தேவைப்பட்டால் கூடுதலாக இயக்கப்படும். வல்லக்கடவு செக் போஸ்ட் வழியாக பகல் 2:00 மணி வரை பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
சபரிமலையில் இருந்து புல்மேட்டிற்கு காலை 9:00 முதல் பகல் 2:00 மணி வரை செல்லலாம். மகரஜோதி தரிசனம் முடிந்து சபரிமலை செல்ல அனுமதி இல்லை. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் புல்மேட்டில் கற்பூரம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும்.
வண்டிபெரியாறில் ஊராட்சிக்குச் சொந்தமான ஸ்டேடியம், வாளாடி மைதானம் ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு வாகனங்கள் குமுளியில் இருந்து கம்ப மெட்டு, கட்டப்பனை, குட்டிக்கானம் வழியாக செல்லவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆலோசனை கூட்டத்திற்கு பின் கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.