ADDED : மார் 23, 2026 08:27 PM
கோவை: தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல், வேளாண் ஏற்றுமதி கழகம்- (டி.என்.அபெக்ஸ்) சார்பில், இறைச்சி பதனிடல் மற்றும் மதிப்புக் கூட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள தேசிய இறைச்சி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (என்.எம்.ஆர்.ஐ.,) இணைந்து மூன்று நாட்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது.
உணவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழக எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின், தொழில்நுட்பத் திறன், மதிப்புக்கூட்டும் திறன்களை அதிகப்படுத்துதல், சந்தைக்கு தயார்படுத்துதல், குறிப்பாக வேளாண் மதிப்புக்கூட்டுதலில் சிறப்புக் கவனம் செலுத்துவது இப்பயிற்சியின் நோக்கம்.
செகந்திராபாத்தில் நடக்கும் இப்பயிற்சியில், உணவு பதனிடல் துறையில் உள்ள தொழில்முனைவோர், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள், வேளாண் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம்.
பயிற்சிக்காலத்தில் தங்குமிடம், உணவு இலவசம். பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி தேதி பின்னர் அறிவிக்கப்படும். தொடர்புக்கு: 70104 99732, 63825 49411.
