/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை கிடங்கில் குழி தோண்டி புதைக்கப்படும் இறைச்சி கழிவுகள்! ஆய்வு செய்யுமா மாசு கட்டுப்பாடு வாரியம்
/
குப்பை கிடங்கில் குழி தோண்டி புதைக்கப்படும் இறைச்சி கழிவுகள்! ஆய்வு செய்யுமா மாசு கட்டுப்பாடு வாரியம்
குப்பை கிடங்கில் குழி தோண்டி புதைக்கப்படும் இறைச்சி கழிவுகள்! ஆய்வு செய்யுமா மாசு கட்டுப்பாடு வாரியம்
குப்பை கிடங்கில் குழி தோண்டி புதைக்கப்படும் இறைச்சி கழிவுகள்! ஆய்வு செய்யுமா மாசு கட்டுப்பாடு வாரியம்
ADDED : ஏப் 18, 2025 07:06 AM
கோவை; கோவை நகர் பகுதியில் சேகரமாகும் இறைச்சி கழிவுகள், வெள்ளலுார் குப்பை கிடங்கில், குழி தோண்டி புதைக்கப்படுவதால், அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். குப்பை கிடங்கை ஆய்வு செய்ய, மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பை, வெள்ளலுார் கிடங்கில் கொட்டுவதால், சுற்றுப்புறச்சூழல் பாதிக்கிறது. நிலத்தடி நீர் பாழ்பட்டுள்ளது. இயற்கையான காற்றை சுவாசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.
குப்பை கழிவோடு இறைச்சி கழிவுகளும் தருவிக்கப்பட்டு, வெள்ளலுார் கிடங்கிலேயே கையாளப்பட்டது. நாளொன்றுக்கு 8-9 டன் இறைச்சி கழிவுகள் வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை மற்றும் விசேஷ தினங்களில், 20 டன் வரை இறைச்சி கழிவுகள் வருகின்றன. இதற்கென தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு, ஒரு யூனிட் செயல்பட்டு வந்தது. இறைச்சி கழிவுகளை சரியாக கையாளாததால், 5 கி.மீ., சுற்றளவுக்கு துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்ததால், இறைச்சி கழிவுகளை கையாண்ட நிறுவனத்துக்கான அனுமதியை மாநகராட்சி ரத்து செய்தது. இச்சூழலில், இறைச்சிக் கழிவுகளை, வெள்ளலுார் கிடங்கு வளாகத்தில் குழி தோண்டி புதைப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதன் காரணமாக, நிலத்தடி நீர் பாதிக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, குறிச்சி - வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழுவினர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'கோவை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் இறைச்சி கழிவுகள், வெள்ளலுார் குப்பை கிடங்கில் குழி தோண்டி புதைக்கிறார்கள். அல்லது வேறு எங்கு கொண்டு செல்கிறார்கள் என தெரியவில்லை.
நிலத்துக்குள் கோழிக்கழிவுகளை கொட்டினால், நிலத்தடி நீர் மாசுபடும். அதை தடுக்க வாரியமும், எங்கள் அமைப்பும் இணைந்து நேரில் ஆய்வு செய்ய வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளனர்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் விளக்கம் கேட்டதற்கு, ''கோழிக்கழிவுகளை கையாள அமைத்த யூனிட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் தடை செய்தோம். மதுரை, மேட்டுப்பாளையத்தில் உள்ள கம்பெனிகளுக்கு கோழிக்கழிவு அனுப்பப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை கூடுதலாக வரும் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த முடியாது; வேறெங்கும் வைத்திருக்க முடியாது. அதனால், வெள்ளலுார் கிடங்கில் குழி தோண்டி புதைக்கிறோம். நிலத்தடி நீர் பாதிக்காத அளவுக்கு, ஒரு லேயர் மட்டும் கொட்டுகிறோம்.
இந்த ஒரு வாரம் மட்டும் கொட்டப்பட்டது. இனி வரும் நாட்களில் எத்தனை டன் சேகரமானாலும் அனைத்தும் சம்பந்தப்பட்ட கம்பெனிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்,'' என்றார்.