கனிம கொள்ளை வேறு வடிவங்களில்...தொடர்கிறது!அரசை ஏமாற்ற குறுக்கு வழி அறிமுகம்
கனிம கொள்ளை வேறு வடிவங்களில்...தொடர்கிறது!அரசை ஏமாற்ற குறுக்கு வழி அறிமுகம்
ADDED : செப் 03, 2026 03:57 AM

கோவை: தொலைதுார இடங்களுக்கு கனிம லோடு கொண்டு செல்வதாக அனுமதி சீட்டு பெறும் சில நிறுவனங்கள், அருகே உள்ள கான்கிரீட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொண்டு செல்வது தெரியவந்துள்ளது. இதனால் அரசுக்கு தினமும் பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதை அறிந்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவையில், 170 கல் குவாரிகளும் (சுரங்கம்) 202 கிரஷர்களும் (கல் அரவை ஆலைகள்) உள்ளன. ஜல்லி, கருங்கல், எம் மற்றும் பி.சாண்ட் தயாரித்து விற்கின்றனர்.
குவாரிகளிலிருந்து கிரஷருக்கு லாரியில்கல் கொண்டு செல்ல சுரங்க அனுமதி சீட்டும், கிரஷரில் இருந்து கட்டுமானம் நடக்கும் இடங்களுக்கு கொண்டு செல்ல கனிம அனுமதி சீட்டும், கனிமவள துறையால் வழங்கப்படுகிறது.
அதில் கனிமத்தின் பெயர், நேரம், எடை, எங்கிருந்து எங்கு செல்கிறது, லாரியின் பதிவு எண் குறிப்பிட்டிருக்கும். முந்தைய ஆட்சிகளில் இந்த விதிகளை சரியாக அமல்படுத்தவில்லை.
ஆட்சி மாற்றம் வந்த பின், விதிகளை முழுமையாக பின்பற்ற உத்தரவு போடப்பட்டது. இதனால் கனிம கடத்தல் குறைந்தது. ஆனால் முறைகேடுகள் நிற்கவில்லை.
கோவை கிரஷர்கள் சிலவற்றில், தூரத்து ஊருக்கு கனிமம் கொண்டு செல்வதாக பில் பதிவு செய்து எடுக்கின்றனர். ஆனால் அவ்வளவு தூரம் போவது இல்லை.
அருகே உள்ள ரெடிமேட் கான்கிரீட் நிறுவனத்துக்கு கனிமத்தை கொண்டு செல்கின்றனர். ஒரே லாரி இவ்வாறு ஒரே நாளில் பலமுறை கனிமம் கொண்டு செல்லப்படுகிறது.
தொலைதூர ஊருக்கு அனுமதி வாங்கிவிட்டு, இத்தனை தடவை வந்து போவது எப்படி? என எவரும் கேட்பது இல்லை.
இப்படி முறைகேடாக வழியில் குறைந்த விலைக்கு கிடைக்கும் கனிமங்களை, அந்த நிறுவனங்கள் கான்கிரீட் கலவையாக மாற்றுகின்றன.
ஜி.எஸ்.டி. ரசீது பிரின்ட் எடுத்து, முறையான வியாபாரம் போல விற்பனை செய்கின்றன. இதனால் தினமும் அரசுக்கு பல லட்சங்கள் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
சமீபத்தில் ஒரு ரெடிமேட் கான்கிரீட் ஆலையில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த ஆலை கொள்முதல் செய்த ஜல்லி, சிமென்ட், எம்.சாண்ட் ஆகிய கனிமங்களின் எடையும், அது விற்பனை செய்த ரெடிமேடு கான்கிரீட் எடையும் கொஞ்சமும் பொருந்தவில்லை. ஏதோ தில்லுமுல்லு என்பது உடனே தெரிந்தது.
கனிமவள துறை வழங்கிய அனுமதி சீட்டுகளை கேட்டு வாங்கி, அவற்றில் இருந்த விவரங்களை ஆய்வு செய்தனர். அனுமதி சீட்டுகளில் இருந்த தகவல்களும், ரெடிமேடு கான்கிரீட் நிறுவனம் சமர்ப்பித்த ஆவணங்களும் மேட்ச் ஆகவில்லை. தில்லுமுல்லு ஊர்ஜிதம் ஆனது.
ஜி.எஸ்.டி.அதிகாரிகள் அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினர். தீவிர விசாரணையில் இறங்கினர்.
ஒரு அதிகாரி இது குறித்து 'தினமலர்' நிரு பரிடம் கூறும்போது, “ரெடிமேடு கான்கிரீட் நிறுவனம் சமர்ப்பித்த ஜி.எஸ்.டி.ஆவணங்களை ஆய்வு செய்தோம்.கொள்முதல் செய்த மூலப்பொருட் களுக்கும், விற்பனை செய்த ரெடிமேடு கான்கிரீட்டுக்கும் எடை வித்தியாசம் மிக அதிகமாக இருந்தது. தீவிரமாக ஆய்வு செய்ததில் பல லட்ச ங்களுக்கு முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்தோம். விசாரணை தொடர்கிறது. விரைவில் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
