UPDATED : ஆக 26, 2026 05:00 PM
ADDED : ஆக 26, 2026 04:51 PM
மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களின் முன் கொடிமரம் இருப்பது முக்கியம். அந்த கோவில்களில் திருவிழா நடைபெறும் போது, கோவிலில் திருவிழா தொடங்கியுள்ளது என்பதை, பக்தர்களுக்கு அறிவிக்கும் விதமாக, கொடிமரத்தில் கொடியேற்றுவது வழக்கம். மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் உள்ள குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில், திருப்பணிகள் துவங்கிய போது, அறங்காவலர் குழுவினர் கொடிமரத்தின் தன்மையை ஆய்வு செய்தனர். மிகவும் பழமையான கொடி மரம் என்பதால், மாற்றி அமைக்க முடிவு செய்தனர்.
இதை அறிந்த கோவில் அருகே உள்ள பாச்சானூர் ஊர் மக்கள் கொடி மரத்தை அமைக்க முன் வந்தனர். 27 அடி உயரமுடைய, புதிய கொடிமரத்தை அமைத்து, அதை சுற்றி பீடம் அமைக்கப்பட்டது. கொடி மரத்திற்கு தாமிர தகடால் கவசம் அணிவிக்கப்பட்டது. கொடிமரம் அருகே மயில் வாகன பீடமும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்த செலவையும் பாச்சானுர் பொதுமக்கள் ஏற்று கொண்டு, கொடி மரத்தை அமைத்துக் கொடுத்தனர்.
சுவாமி ஓவியங்கள்
குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலின் உள்ளே, மேல் தள சிலிங்கில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. முருகப் பெருமானின் திருக்கல்யாண வைபவ ஓவியம் அழகுற வரையப்பட்டுள்ளது. கொடி மரத்தின் மேல் பகுதியில் உள்ள சீலிங்கில் திருத்தணி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை, சுவாமிமலை, பழனி ஆகிய முருகனின் அறுபடை வீடு கோவிலில் உள்ள மூலவர் சுவாமி சிலைகள் தத்ரூபமாக வரையப்பட்டு உள்ளன. கோவிலில் உள்ள அனைத்து தூண்களுக்கும் பல்வேறு டிசைன்களில் வர்ணங்கள் பூசப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக உள்ளது.
குமரன் குன்று கல்யாண சுப்பிரமணி சுவாமி கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:
அதிகாலை: 5:00 மணி முதல் மதியம், 1:00 வரை.
மாலை, 4:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை.
