ADDED : ஏப் 06, 2025 09:49 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை ஒப்பிடுகையில் மாற்றம் கிடையாது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில் எந்த மாற்றம் இன்றி, 45 ரூபாய்க்கு நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 18,000 ரூபாய். தொடர்ந்து இளநீர் வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது.
தேவை அதிகமாக இருப்பதால், இளநீருக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் அனைத்து வட மாநிலங்களிலும் கடுமையான வெயில் நிலவுகிறது. அதன் காரணமாக இளநீரின் தேவை அதிகமாகவே உள்ளது.
மக்கள் நலன் கருதி, இந்த வாரம் இளநீர் விலை உயர்த்தப்படவில்லை. இனி வரும் நாட்களில், வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது சூழ்நிலைக்கு ஏற்ப விலை உயர்த்த வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.