ADDED : செப் 10, 2026 04:22 AM
வால்பாறை: வால்பாறை நகராட்சியில் மொத்தம், 89 பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படுகின்றன. நாள் தோறும் 2,204 மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. சத்துணவு மையங்களில் பணிபுரியும் அமைப்பாளர், சமையலர், உதவியாளர் ஆகியோருக்கு மாதம் தோறும் வங்கி கணக்கு வாயிலாக சம்பளம் வழங்கப்படும். ஆனால் இந்த மாதம் (8ம் தேதி) வரை சம்பளம் வழங்கப்படவில்லை.
சத்துணவு ஊழியர்கள் கூறுகையில், 'எங்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை. தாமதமாக சம்பளம் வழங்கப்படுவதால் குடும்ப செலவுகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. மாதம் தோறும் ஒன்றாம் தேதி சம்பளம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'நிர்வாக காரணங்களால் சத்துணவு ஊழியர்களுக்கு குறிப்பிட்ட நாளில் சம்பளம் வழங்க முடியவில்லை. ஓரிரு நாளில் அனைவருக்கும் சம்பளம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
