/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10 மாதத்தில் விற்ற ஊட்டி உருளைக்கிழங்கு.. 21,000 டன் . தொடர்ந்து உயர்வதால் விவசாயிகள் குதூகலம்
/
10 மாதத்தில் விற்ற ஊட்டி உருளைக்கிழங்கு.. 21,000 டன் . தொடர்ந்து உயர்வதால் விவசாயிகள் குதூகலம்
10 மாதத்தில் விற்ற ஊட்டி உருளைக்கிழங்கு.. 21,000 டன் . தொடர்ந்து உயர்வதால் விவசாயிகள் குதூகலம்
10 மாதத்தில் விற்ற ஊட்டி உருளைக்கிழங்கு.. 21,000 டன் . தொடர்ந்து உயர்வதால் விவசாயிகள் குதூகலம்
ADDED : பிப் 13, 2026 05:08 AM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 10 மாதங்களில் 21 ஆயிரம் டன் ஊட்டி உருளைக் கிழங்கு ரூ.57.58 கோடிக்கு விற்பனை செய்யப் பட்டுள்ளது.
நெல்லித்துறை சாலையில் இந்த விற்பனை சங்கம் செயல்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் விளையும் உருளைக்கிழங்குகள் இங்குதான் தினசரி ஏலம் மூலமாக விற்கப்படுகிறது.
கேத்தி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் இருந்து, சீசன் நேரத்தில் தினமும் 100 விவசாயிகள் இங்கு உருளைக்கிழங்கு கொண்டுவந்து, இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக வியாபாரிகளுக்கு விற்கின்றனர்.
வியாபாரிகள் ஏலம் எடுத்து, தூத்துக்குடி துறைமுகம் வழியாக மாலத்தீவு, இலங்கைக்கு ஏற்றுமதி செய்கின்றனர். கேரளாவுக்கும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் அனுப்புகின்றனர்.
தரகர் இன்றி ஏலம் மூலம் விற்பதால், யாருக்கும் விவசாயிகள் கமிஷன் கொடுக்க தேவையில்லை. மேலும், ஏலம் நடப்பதற்கு முன்பே, தாங்கள் கொண்டுவந்த உருளைக்கிழங்கு மீது கடன் பெறலாம். நேர கட்டுப்பாடு இல்லாமல், 24 மணி நேரமும் கிழங்கு எடுத்து வரலாம். இதனால் நீலகிரி விவசாயிகள் வெளி மார்க்கெட்டை விட, இங்கு விற்கவே ஆர்வம் காட்டுகின்றனர்.
கடந்த 2022--23ம் நிதியாண்டில் 13 ஆயிரத்து 89 டன் உருளைக்கிழங்கு, ரூ.32 கோடிக்கு விற்பனை ஆனது. 2023ல் 20 ஆயிரத்து 600 டன் ரூ.54 கோடிக்கு விற்றது. 2024-ல் 20 ஆயிரத்து 890 டன் ரூ.73 கோடிக்கு விற்பனையானது. இந்த நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் ஜனவரி 31 வரை 21 ஆயிரத்து 781 டன் உருளைக்கிழங்கு, ரூ.57 கோடியே 59 லட்சத்துக்கு விற்பனை நடந்துள்ளது.
மார்ச் இறுதியில் நிதியாண்டு முடியும்போது, இதுவரை காணாத அளவில் உருளைக்கிழங்கு மிக அதிகமாக விற்பனையாகும் என விற்பனை சங்க நிர்வாகி மதிப்பிட்டார்.
விலை சரியாமல் விற்பனை அதிகமாகி வருவதால், உருளைக்கிழங்கு உற்பத்தியையும் விவசாயிகள் அதிகரித்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையத்துக்கு சரக்கு எடுத்து வரும் விவசாயிகள் எண்ணிக்கையும் உயர்கிறது. கடந்த ஆண்டில் 7,906 பேர் வந்தனர். இந்த ஆண்டு 10 மாதங்களில் 8,153 விவசாயிகள் வந்துள்ளனர். மகிழ்ச்சியுடன் திரும்பி உள்ளனர் என்று சங்க நிர்வாகி கூறினார்.-----

