/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனுமதியற்ற மனைகள் வரன்முறை: ஊராட்சி தலைவர், செயலர்களுக்கு உத்தரவு
/
அனுமதியற்ற மனைகள் வரன்முறை: ஊராட்சி தலைவர், செயலர்களுக்கு உத்தரவு
அனுமதியற்ற மனைகள் வரன்முறை: ஊராட்சி தலைவர், செயலர்களுக்கு உத்தரவு
அனுமதியற்ற மனைகள் வரன்முறை: ஊராட்சி தலைவர், செயலர்களுக்கு உத்தரவு
ADDED : ஜன 07, 2024 11:47 PM
சூலுார்:'அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது,' என, ஊராட்சி தலைவர்கள், செயலர்களுக்கு, சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜூ உத்தரவிட்டுள்ளார்.
சூலுார் வட்டாரத்தில், அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறை படுத்துவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, சூலுார் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சி) முத்துராஜூ, ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு, சில வழிகாட்டுதல்களை வழங்கி, உத்தரவிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த, 20.10.2016 க்கு முன் மனைப்பிரிவுகள் பிரிக்கப்பட்டு, அந்த தேதிக்கு முன் பதிவுத்துறை மூலம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவைதான் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் ஆகும்.
அவற்றில் ஏற்கனவே விற்கப்பட்ட மனைகளை மட்டுமே முறைப்படுத்தி, பி.டி.ஓ., விடம் ஆணை பெறவேண்டும். மேற்கண்ட தேதி வரை ஒரு மனை கூட விற்பனை செய்யப்படவில்லை எனில், அது புது மனைப்பிரிவாக கருதப்படும். நகர் ஊரமைப்பு துறையின் தொழில்நுட்ப அனுமதியின் பேரில், ஊராட்சி தலைவர்கள் மட்டுமே அனுமதி வழங்க இயலும்.
ஏற்கனவே நகர் ஊரமைப்பு துறை உத்தரவின் பேரில், பி.டி.ஓ., வால் வரன்முறைபடுத்தி உத்தரவிடப் பட்டிருந்தால், இதர மனைகளை பி.டி.ஓ.,வே வரன்முறைப்படுத்தி உத்தரவிடலாம். அதற்கு, ஊரமைப்பு துறையின் அனுமதி எண், மனை எண், தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
அரசாணையில் வரன்முறை திட்டத்தில் கூராய்வு கட்டணமாக, ஒரு மனைக்கு, 500 ரூபாயை ஊரமைப்பு துறைக்கு ஆன்லைன் வாயிலாக செலுத்த வேண்டும்.
அரசு அனுமதித்து உள்ள வரன்முறை மற்றும் வளர்ச்சி கட்டணத்தை வசூல் செய்து, உரிய முறையில் செலுத்த வேண்டும். கூடுதல் கட்டணத்தை வசூலிக்க கூடாது.
இதற்கென தனி பதிவேடு துவக்கி, வசூல் செய்து வங்கியில் செலுத்தப்பட்ட தொகை விபரத்தை ஊராட்சி செயலர்கள் பதிவு செய்து, ஊராட்சி தலைவரின் கையெழுத்தை பெற்றிருக்க வேண்டும். இதை சம்மந்தப்பட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
மனுதாரரின் நில உரிமை, தேவையான அணுகு சாலை அகலம், உயர் கோபுர மின் கம்பிகள் மற்றும் உயரழுத்த மின் கம்பிகளுக்கு கீழ் முழுமையாகவோ, பகுதியாகவோ அமையவில்லை என்பதை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி செய்து பரிந்துரைக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பங்களுடன், எஸ்.எப்., எண், உட்பிரிவு எண், வரைபட நகல், கிராமத்தின் நில அளவை எண்கள் அடங்கிய வரைபட நகல், விற்பனை ஆவணம், பட்டா, வில்லங்க சான்று, கட்டணம் செலுத்தியதற்கான ரசீது நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
மேற்கண்ட வழிகாட்டுதல்களை பின்பற்றி, முறைகேடுகளுக்கு இடம் அளிக்காமல், தற்போது வரும் விண்ணப்பங்கள், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை பதிவேடுகளில் பதிவு செய்து, மனுதாரருக்கு ஒப்புதல் ரசீது வழங்க வேண்டும்.
காலதாமதமின்றி விதிகளை முறையாக பின்பற்றி விண்ணப்பதாரர்களுக்கு வரன்முறை உத்தரவுகளை உடனுக்குடன் வழங்கி, அதன் நகலை வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.