/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிகிச்சை கட்டணம் வழங்க உத்தரவு
/
சிகிச்சை கட்டணம் வழங்க உத்தரவு
ADDED : செப் 16, 2025 11:07 PM
கோவை; பெண்ணுக்கு சிகிச்சை கட்டணம் வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் அருகே உள்ள கோம்பக்காடு புதுார் பகுதியை சேர்ந்த சிவசங்கரன், மெர்சஸ் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், குடும்ப உறுப்பினர்களை சேர்த்து மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்ந்தார். இவரது மனைவிக்கு சிறுநீரக தொற்று பிரச்னை ஏற்பட்டதால், 2022, ஏப்., 22ல், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை கட்டணம், 27,046 ரூபாய் செலுத்தினார்.
இத்தொகையை வழங்கக்கோரி, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பித்தார். சிகிச்சை பெற்றவர் முன்நோய் இருந்ததை மறைத்து, பாலிசி எடுத்ததாகக் கூறி பணம் வழங்க மறுத்தனர். இழப்பீடு கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், சிவசங்கரன் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரர் மனைவி சிகிச்சை பெற்றதற்கான தொகை, 27,046 ரூபாய், இன்சூரன்ஸ் நிறுவனம் கொடுப்பதுடன், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.