புகை பரிசோதனைக்கு இனி ஓ.டி.பி., கட்டாயம்; பரிசோதனை மையங்களில் புதிய நடைமுறை
புகை பரிசோதனைக்கு இனி ஓ.டி.பி., கட்டாயம்; பரிசோதனை மையங்களில் புதிய நடைமுறை
ADDED : ஜூலை 14, 2026 06:10 AM

கோவை: வாகன இயக்கத்தின்போது வெளிவரும் புகையானது காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. இதை கட்டுப்படுத்த டூ வீலர், கார் உட்பட அனைத்து வாகனங்களும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, புகை மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற வேண்டும்.
இச்சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
மாநகரில் வடக்கு, தெற்கு, மத்திய, மேற்கு என நான்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இந்த எல்லைக்குள் 10க்கும் மேற்பட்ட புகை பரிசோதனை மையங்கள் உள்ளன.
புகை பரிசோதனைக்கு புதிய நடைமுறைகள் வந்துள்ளன. அதன்படி ஓ.டி.பி., கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பரிசோதனை செய்யும் வாகன ஓட்டிகள் தங்களது வண்டியின் ஆர்.சி., புத்தகத்தில், ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் கட்டாயம் இருக்க வேண்டும்.
பழைய ஆர்.சி., புத்தகத்தில் மொபைல் எண் இல்லாதது, வேறு எண் போன்ற காரணங்களால் வாகன ஓட்டிகள் புகை கட்டுப்பாட்டு சான்றிதழ் பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது.
மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பிரதீபாவிடம் கேட்டபோது, ''https://parivahan.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக வாகன ஓட்டிகள் ஆர்.சி., புத்தகத் தில் மொபைல் எண்ணை 'அப்டேட்' செய்துகொள்ளலாம். ஒருவேளை ஆதார் மற்றும் ஆர்.சி., புத்தகம் ஆகியவற்றில் மொபைல் எண் உள்ளிட்ட தகவல் கள் மாறுபட்டு இருப்பின் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு நேரில் வந்து 'அப்டேட்' செய்துகொள்ளலாம்,'' என்றார்.
