/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆளிறங்கு குழியில் வெளியேறும் கழிவுநீர் தொடரும்: பிரச்னையால் மக்கள் அவதி
/
ஆளிறங்கு குழியில் வெளியேறும் கழிவுநீர் தொடரும்: பிரச்னையால் மக்கள் அவதி
ஆளிறங்கு குழியில் வெளியேறும் கழிவுநீர் தொடரும்: பிரச்னையால் மக்கள் அவதி
ஆளிறங்கு குழியில் வெளியேறும் கழிவுநீர் தொடரும்: பிரச்னையால் மக்கள் அவதி
ADDED : பிப் 27, 2024 11:34 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில், ஆங்காங்கே அமைந்துள்ள பாதாள சாக்கடை ஆளிறங்கு குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறும் பிரச்னை தொடர்கதையாகி வருவதால் சுகாதாரம் பாதிக்கிறது.
பொள்ளாச்சி நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் கடந்த, 2016ம் ஆண்டு, 109.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டது. தொடர்ந்து, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, 170 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக, சந்தை பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அடைப்பு, சீரமைப்பு பணி மேற்கொள்ளும் பொருட்டு, ஆங்காங்கே ஆள் இறங்கும் குழிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கட்டுமானப் பணிகள் முடிந்தும், வீடுகளுக்கான இணைப்புகள் முழுமை பெறாமல் உள்ளது. அதேநேரம், நகரில், ஆங்காங்கே அமைந்துள்ள ஆளிறங்கு குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறும் பிரச்னை தொடர்கதையாகி வருகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
சமீபத்தில், அன்சாரி வீதியில் அமைந்துள்ள ஆளிறங்கு குழியில் இருந்து வெளியேறிய கழிவு நீர், குடியிருப்புகளுக்குள் புகுந்தது. நகராட்சிக்கு தகவல் தெரிவித்து, ஒரு நாள் கழித்த பிறகே, பணியாளர்கள் சீரமைப்பு மேற்கொண்டுள்ளனர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இத்தகைய பிரச்னைகளின் போது, வீதிகளில் கழிவு நீர் பல நாட்கள் வெளியேறினாலும், எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. கடந்த சில நாட்களாக, ராஜாமில் ரோட்டில், பாதாளச்சாக்கடை ஆளிறங்கு குழி வழியாக, கழிவு நீர் வெளியேறி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
அடிக்கடி ஏற்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். பாதாள சாக்கடையில், பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலித்தீன் கவர்களால் ஏற்படும் அடைப்பை நீக்கும் பொருட்டு, அடிக்கடி சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

