/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டப்பகலில் நடக்குது கொள்ளை அச்சத்தில் காரமடை மக்கள்
/
பட்டப்பகலில் நடக்குது கொள்ளை அச்சத்தில் காரமடை மக்கள்
பட்டப்பகலில் நடக்குது கொள்ளை அச்சத்தில் காரமடை மக்கள்
பட்டப்பகலில் நடக்குது கொள்ளை அச்சத்தில் காரமடை மக்கள்
ADDED : பிப் 22, 2024 05:01 AM
மேட்டுப்பாளையம்: காரமடையில் அடுத்தடுத்து இரு வீடுகளில், பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரமடையில் கடந்த 15ம் தேதி மதியம், வசந்தம் நகரை சேர்ந்த சந்திரசேகர் வீட்டில், முன்பக்க கதவு உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.8 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டன.
பின், அர்ச்சனா கார்டன் பகுதியில் வசித்து வரும் தனியார் நிறுவன ஊழியர் பிரகாஷ் என்பவரது வீட்டிலும், கதவு உடைக்கப்பட்டு, சுமார் 4 சவரன் தங்க நகைகள், ரூ. 11 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்களை பிடிக்க காரமடை போலீசார் 3 தனிப்படை அமைத்துள்ளனர். தனிப்படையினர் சம்பவங்கள் நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விபரம் சேகரித்தனர். இதுவரை கொள்ளையர்கள் சிக்கவில்லை.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''கொள்ளையாளர்கள் மொத்தம் 3 பேர். இவர்கள் ஒரே பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்து கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையடித்துவிட்டு பைக்கில் கிளம்பிய போது, அருகில் உள்ள வீடுகளில் வெளியே நின்றவர்களிடம் கத்தியை காட்டி செய்கை வாயிலாக மிரட்டியுள்ளனர்.
பேசினால் குரல், பாஷை தெரிந்துவிடும் என எண்ணி இவ்வாறு செயல்பட்டுள்ளனர். எனினும், விரைவில் இவர்களை பிடித்து விடுவோம். இரவு நேர ரோந்து பணிகளை அதிகரித்துள்ளோம்,'' என்றனர். பட்டப்பகலில் நகர் பகுதியிலேயே நடந்த கொள்ளை சம்பவங்கள், இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரமடை பகுதி மக்கள் கூறுகையில், 'பட்டப்பகலில் கொள்ளையர்கள் தைரியாக நடமாடுகின்றனர். வீட்டில் தனியாக குழந்தைகள், பெரியவர்களை வீட்டு செல்ல பயமாக உள்ளது. போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். கொள்ளையர்களை விரைந்து பிடிப்பதோடு, மக்களின் அச்சத்தையும், போலீசார் போக்க வேண்டும்,'' என்றனர்.--