ADDED : ஜூலை 08, 2026 07:34 AM

பேரூர்: சிறுதுளி அமைப்பு, பேரூர் ஆதின மடம், ராக் அமைப்பு சார்பில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில் நேற்று நடந்தது.
இதில், நீர் நிலைகளில் குவிந்து வரும் குப்பையால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசு குறித்தும், தடுப்பது குறித்தும் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் எடுத்துரைத்தார்.
கூடுதல் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகே, வீடுகளில் எவ்வாறு குப்பையை தரம் பிரிக்க வேண்டும் என விளக்கினார்.
'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் பேசுகையில், நம் வீட்டில் இருந்து வெளியே செல்லும் குப்பை, நொய்யல் ஆறு, நீர்நிலைகளை சென்றடைவதால் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. நீர்நிலைகளை தூய்மையாக பாதுகாக்க, திடக்கழிவு மேலாண்மை அவசியம். குப்பையை தரம் பிரித்து, தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
அதற்காக, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில் உள்ள 400 மாணவர்கள், பேரூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று, குப்பையை 4 விதமாக தரம் பிரித்து வழங்க, விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்,என்றார்.
