தீக்குளித்து பெண் தற்கொலை
பொள்ளாச்சி, கோமங்கலம்புதுாரை சேர்ந்த ஜோதிமணி,30, வக்கம்பாளையத்தை சேர்ந்த ஆனந்தன் ஆகியோருக்கு, கடந்த, 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஜோதிமணி அவரது அண்ணன் முருகனுக்கு போன் செய்து, பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.
கடந்த, 2ம் தேதி ஜோதிமணியை கோமங்கலம்புதுாருக்கு முருகன் அழைத்துச் சென்றார். இந்நிலையில், ஆனந்தன் அடிக்கடி போன் செய்து ஜோதிமணியிடம் பேசியுள்ளார். இதையடுத்து, கடந்த, 8ம் தேதி கணவன் வீட்டிற்கு ஜோதிமணி சென்றார். நேற்று காலை, ஜோதிமணி உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டதாக, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து, ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்ற மூவர் கைது
பொள்ளாச்சி கோட்டூர் ரோடு ஜோதிநகர் அருகே, கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், எஸ்.ஐ., கவுதமன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி நின்ற நபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், பொள்ளாச்சியை சேர்ந்த சக்திவேல், 22, மணிகண்டன்,26, முகமது அப்துல்லா, 26, ஆகியோர் என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், ஒரு கிலோ, 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தொழிலாளி தற்கொலை
பொள்ளாச்சி அருகே, பக்கோதிபாளையத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்,29; இளநீர் போடும் வேலைக்கு சென்று வந்தார். வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது தினமும் மது குடித்து வந்துள்ளார். இதனால், அவரது மனைவி கோபித்துக்கொண்டு அவரது அம்மா வீட்டுக்கு சென்றார்.தனியாக இருந்த ரஞ்சித்குமார், மது போதையில் போனில் அவரது மனைவியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று சேலையில் துாக்கிட்டு ரஞ்சித்குமார் தற்கொலை செய்து கொண்டார். கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கையை அறுத்து தற்கொலை
பொள்ளாச்சி அருகே, ஆத்துப்பொள்ளாச்சியை சேர்ந்தவர் கதிர்வேல்,27; தனியார் பஸ் டிரைவர். கருத்து வேறுபாடு காரணமாக, நான்கு மாதங்களுக்கு முன், இவரது மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
மனவருத்தத்தில் இருந்தவர், தனுக்குத்தானே கையை அறுத்துக்கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பின், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.