ADDED : மார் 16, 2026 06:43 AM

கோவை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மாநகர போலீசார் 'ஸ்ட்ரோமிங் ஆப்ரேஷன்' நடத்தினார்கள்.
கண்காணிப்பு பணியில், நான்கு உதவி கமிஷனர்கள், 18 இன்ஸ்பெக்டர்கள், 28 எஸ்.ஐ., க்கள், சி.ஆர்.பி.எப்., போலீசார், 60 என, 564 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாநகர பகுதிகளில் குற்றச்செயல்களை தடுக்க, போதைப்பொருள் வினியோகிப்பவர்களை அடையாளம் காணவும், ரவுடிகளின் செயல்பாடுகள் ஒடுக்க கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. பொது இடங்கள், கல்லுாரி மாணவர்கள் தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள், பார்சல் சர்வீஸ் நிறுவனங்கள், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடந்தது.
மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் கூறுகையில்,''கண்காணிப்பில், மாநகரை விட்டு வெளியேற உத்தரவிட்டும் வெளியேறாமல் இருந்த 3 குற்றவாளிகள், தலைமறைவாக இருந்த 'ஏ' பிரிவு ரவுடி, கஞ்சா வைத்திருந்த கல்லுாரி மாணவர்கள் உட்பட 21 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர். சந்தேகத்திற்கு இடமான, 14 பைக்குகள் கைப்பற்றப்பட்டன. சந்தேகத்தின் பேரில் 15 பேரிடம் கைரேகை பெறப்பட்டு, கைரேகை பதிவு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. சோதனை தொடரும்,'' என்றார்.

