வார்ப்பு மாவு விநாயகர் வேண்டாம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உஷார்
வார்ப்பு மாவு விநாயகர் வேண்டாம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உஷார்
ADDED : ஆக 23, 2026 05:16 AM

விநாயகர் சதுர்த்தி செப்.14ல் வருகிறது. வீடுகளில் சிறிய விநாயகர் சிலையும் பொது இடங்களில் பெரிய சிலையும் வைத்து வழிபடுவது வழக்கம். பின்னர் அவை நீர்நிலைகளில் கரைக்கப்படும். விசர்ஜனம் செய்வது என்பார்கள்.
சாலையோரம் வசிக்கும் வடமாநில மக்கள், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பயன்படுத்தி பிள்ளையார் சிலை செய்து, பல வண்ணங்கள் பூசி விற்கின்றனர்.
இந்த சிலைகளால் சூழலுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். ஆகவே, மாசு தடுப்பு வாரிய அதிகாரிகள் கண்காணித்து பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பிள்ளையார்கள் விற்பதை தடுக்க சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்தியாவில் பக்தி என்பது இயற்கையோடு இசைந்த விஷயம். இயற்கையை வணங்கும் மக்கள் நாம். அதை அழிப்பதும் நாம் தான். அறியாமையில் செய்கிறோம். அதனால், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்-ன் பின்னணியை தெரிந்து கொள்வோம்.
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் என்பதை POP என்று சுருக்கி சொல்வார்கள் வியாபாரிகள். தமிழில் பல பெயர்கள் உலா வருகின்றன. வார்ப்பு மாவு என்பது இருப்பதில் பொருத்தமான பெயர்.
சரி, அதில் ஏன் பிள்ளையார் சிலை செய்ய கூடாது?
நம் முன்னோர் களிமண்ணில் சிலை செய்ய சொன்னதற்கு காரணம் உண்டு. நீர்நிலைகளில் தோண்டி எடுக்கும் வண்டல் களிமண்ணை எடுத்து யார் வேண்டுமானாலும் சிலை செய்யலாம்.
பிள்ளையார் சிலை செய்வதை காட்டிலும் சுலபமான வேலை உலகத்தில் கிடையாது. ஏனென்றால், அவர் எந்த வடிவத்திலும் அழகு. எல்லா வடிவத்திலும் அழகு. சதுர்த்தி முடிந்தபின் அதை மீண்டும் நீர்நிலையில் கரைப்பார்கள்.
களிமண் தண்ணீரில் கரையும் போது, அது நீரோட்டத்தை சுத்தம் செய்யும். ஏரி- குளங்களின் கரைகளில் படிந்து ஓரங்களை பலப்படுத்தும்.
களிமண் சிலை தண்ணீரில் போட்ட சில மணி நேரங்களில் கரைந்து விடும். வார்ப்பு மாவில் செய்த சிலைகள் பல மாதங்கள் தண்ணீரில் கிடந்தாலும் கரையாது, அப்படியே இருக்கும்.
இதனால் ஏரி, குளங்களின் நீர் கொள்ளளவு பாதிக்கும். வார்ப்பு மாவு சிலைகளில் பல வண்ணங்கள் பூசுவார்கள். அந்த பெயின்டுகளில் காரீயம் (Lead) , பாதரசம் (Mercury) போன்ற அபாயகரமான ரசாயனங்கள் கலந்து இருக்கின்றன.
தண்ணீரில் கரையாத வார்ப்பு மாவும், நச்சு பெயின்டும் தண்ணீரின் ஆக்சிஜன் அளவை குறைத்து, மீன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களின் உயிரை குடித்து விடும்.
நச்சுப் பொருட்கள் மெதுவாக நிலத்தடி நீரில் கலந்து, நாம் குடிக்கும் கிணறு அல்லது போர்வெல் தண்ணீரை மாசுபடுத்தும். இதுதான் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் தடையின் பின்னணி. இந்திய பாரம்பரியத்தில் ஆன்மிகமும் அறிவியலும் ஒன்றாக கலந்திருக்கின்றன. இயற்கையை காப்பது அந்த பாரம்பரியத்தின் வழிபாட்டு முறை. இறை வழிபாடும் இயற்கையை காப்பதும் ஒன்றுதான்.
இந்த விநாயகர் சதுர்த்திக்கு வார்ப்பு மாவு (POP) சிலைகளை அடியோடு தவிர்ப்போம். வண்ணம் பூசாாத களிமண் சிலை மட்டுமே வாங்குவோம். இயற்கையை காப்போம்! இறைவனின் அருள் பெறுவோம்!
-- முரளிக்கண்ணன்
@subboxhd@'பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்'
என்று ஏன் பெயர் வந்தது?
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகில் 'மான்ட்மார்ட்ரே' என்ற இடம் உள்ளது. அங்கே 18ம் நூற்றாண்டில் 'ஜிப்சம்' என்ற பாறைகள் கிடைத்தன. வெட்டி எடுத்து சூடாக்கியபோது வெள்ளை நிற மாவு கிடைத்தது. அது பொம்மை செய்ய வசதியாக இருந்தது. சிலைகளை கல்லில் செதுக்குவதை விடவும், களிமண்ணால் செய்வதை விட செம ஈசி. பிரஞ்சுக்காரர்கள் இந்த மாவில் அழகான சிலைகள் செய்வதை பார்த்து மற்ற நாடுகள் மிரண்டு போயின. எங்களுக்கும் தாருங்களேன் என கேட்டன. மண்ணையும் கல்லையும் விற்க சான்ஸ் கிடைத்ததே என்று, பிரான்ஸ் குஷியாக ஏற்றுமதி செய்தது. பாரிஸ் நகரில் இருந்து வந்ததால், உலக மக்கள் அதை பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் என்று அழைத்தனர். இது வரலாறு.
