பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்பதில் நீடிக்கும் பிரச்னைகள்
பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்பதில் நீடிக்கும் பிரச்னைகள்
ADDED : செப் 17, 2026 07:31 PM
கோவை: மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது தொடர்பாக சைல்டு ஹெல்ப் லைன் எண்ணுக்கு வரும் புகார்கள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக, ஜி.பி., சிக்னல், பன் மால், சரவணம்பட்டி–சக்தி சாலை, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதாக புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து, 7 மாதங்களில் 32 குழந்தைகள் மீட்கப்பட்டு, குழந்தைகள் பாதுகாப்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர். 15 குழந்தை தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர்.
மீட்கப்படும் குழந்தைகள் மீண்டும் வேறு இடங்களில் பிச்சை எடுக்கும் நிலை தொடர்வதால், இதை கட்டுப்படுத்துவதில் சவால்கள் நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
”சைல்டு ஹெல்ப் லைன் எண்ணுக்கு அழைப்பு வந்தவுடன் சம்பவ இடத்துக்கு செல்கிறோம். அதற்குள் சம்பந்தப்பட்டவர்கள் வேறு இடத்துக்கு சென்று விடுகின்றனர். குழந்தைகளை மீட்டாலும், அவர்களின் பாதுகாவலர்கள் அழைத்து சென்று விடுகின்றனர். இருப்பிடம் இல்லாத குழந்தைகளை காப்பகங்களில் சேர்க்க பார்க்கிறோம். ஆனால், சிலர் காப்பகங்களில் தங்க சம்மதிப்பதில்லை” என்றனர்.
குழந்தையுடன் மீட்கப்படும் ஆதரவற்ற பெண்களுக்கு இமயம் உள்ளிட்ட சமூக நலத்துறை காப்பகங்கள் செயல்படுகிறது. ஆனால், அங்கு 5 வயதுக்கு மேற்பட்ட ஆண் குழந்தைகளுடன் பெண்கள் தங்குவதற்கு விதிமுறை இடையூறாக உள்ளது.
இதனால், குழந்தைகளை பிரித்து காப்பகங்களில் தங்க வைக்க தயக்கம் காட்டுகின்றனர். மாநகராட்சி சார்பில் செயல்படும் சில காப்பகங்களிலும் இடப்பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் ஆதரவற்ற பெண்கள் குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது. காப்பக வசதிகளை விரிவுபடுத்துவது அவசியம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
