/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர் - பட்டம்' இதழ் சார்பில் வினாடி - வினா: திசா வாழ்வியல் பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
'தினமலர் - பட்டம்' இதழ் சார்பில் வினாடி - வினா: திசா வாழ்வியல் பள்ளி மாணவர்கள் அசத்தல்
'தினமலர் - பட்டம்' இதழ் சார்பில் வினாடி - வினா: திசா வாழ்வியல் பள்ளி மாணவர்கள் அசத்தல்
'தினமலர் - பட்டம்' இதழ் சார்பில் வினாடி - வினா: திசா வாழ்வியல் பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : நவ 06, 2025 11:13 PM

பொள்ளாச்சி: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் சார்பில், 'பதில் சொல் -- பரிசை வெல்' மெகா வினாடி --- வினா போட்டி, பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டி திசா வாழ்வியல் பள்ளியில் நடந்தது.
மாணவர்களின் கற்றல் ஆர்வம் மற்றும் நுண்ணறிவுத்திறனை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழ் 'பட்டம்' இதழ் சார்பில், மெகா வினாடி -- -வினா போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
நடப்பாண்டு போட்டியானது, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் வினாடி- - வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட் ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன.
இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணியினர், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர்.
அவ்வகையில், பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டி திசா வாழ்வியல் பள்ளியில், வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.தகுதிச்சுற்றில், 100 மாணவர்கள் பங்கேற்றனர்.
அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளி அளவில் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், 'ஏ' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற 7ம் வகுப்பு மாணவிகள் ஜீவாத்மிதா, ரிதா ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி முதல்வர் உமாரமணன், பொதுமேலாளர் கிருஷ்ணகுமார், ஒருங்கிணைப்பாளர் மாரியம்மாள், தமிழாசிரியர் கோமதி உள்ளிட்டோர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
அறிவுத்திறனை மேம்படுத்துகிறது முதல்வர் உமாரமணன் கூறுகையில், ''தினமலர்'நாளிதழின் 'பட்டம்' இதழ் மாணவர்களின் அறிவுக் கருவூலமாக திகழ்கிறது. இந்த இதழில் இடம்பெறும் கணிதக் குறிப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், வரலாற்று செய்திகள், தாய்மொழியாம் தமிழ் மொழியின் தொன்மை மற்றும் பண்பாடுகள் ஆகியவை மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் உள்ளது,'' என்றார்.

