/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
27 ஆண்டாக ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த ரூ.3.5 கோடி மதிப்புள்ள 'ரிசர்வ் சைட்' மீட்பு
/
27 ஆண்டாக ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த ரூ.3.5 கோடி மதிப்புள்ள 'ரிசர்வ் சைட்' மீட்பு
27 ஆண்டாக ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த ரூ.3.5 கோடி மதிப்புள்ள 'ரிசர்வ் சைட்' மீட்பு
27 ஆண்டாக ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த ரூ.3.5 கோடி மதிப்புள்ள 'ரிசர்வ் சைட்' மீட்பு
ADDED : நவ 18, 2024 10:51 PM

கோவை; கோவை மாநகராட்சி, 84வது வார்டில், 27 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த, ரூ.3.5 கோடி மதிப்புள்ள, 7.62 சென்ட் 'ரிசர்வ் சைட்' மீட்கப்பட்டது.
கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், 84வது வார்டுக்கு உட்பட்ட ராமநாதபுரம் - நஞ்சுண்டாபுரம் சாலையில், 'பார்சன் செஸ் நெஸ்ட்லே' அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்துக்கு, 1997ல் நகர ஊரமைப்பு துறையால் அனுமதி பெறப்பட்டது. மொத்தம், 2.24 ஏக்கரில், 97,639 சதுரடி விஸ்தீரணத்துக்கு, தரை தளம் மற்றும் மூன்று தளங்களுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
10 சதவீத பொது ஒதுக்கீடு இடமாக, இரண்டு இடங்களில், 20 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது. அதில், 7.62 சென்ட் இடத்தில் மளிகை ஸ்டோர், 2 சென்ட் இடத்தில் 'டோபிகானா' நடத்துவதற்கு கட்டடம் கட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, அங்கு குடியிருக்கும் இன்ஜினியர் கனகசுந்தரம், சென்னை ஐகோர்ட்டில், 2019ல் வழக்கு தொடர்ந்தார்.
மத்திய மண்டத்தில் இதற்கு முன் பணிபுரிந்த உதவி நகரமைப்பு அலுவலர்கள், மாநகராட்சி கமிஷனருக்காக பதில் மனு தாக்கல் செய்யாமல் விட்டு விட்டனர். 'எதிர்வாதுரை தாக்கல் செய்யாவிட்டால், அபராதம் விதிக்கப்படும்' என, சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்த பிறகே, மாநகராட்சி அதிகாரிகள் உஷாராகினர். அதன் பின்பே, ஆக்கிரமிப்பாளருக்கு மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் இருந்து எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதன்பின், ஐகோர்ட்டில் மாநகராட்சி சார்பில் எதிர்வாதுரை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு வர இருந்ததால், ஆக்கிரமிப்பை அகற்ற, போலீஸ் பாதுகாப்பு கோரி, மாநகராட்சியில் இருந்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது, இச்சூழலில், ஆக்கிரமிப்பாளரே தாமாக முன்வந்து, மளிகை கடையில் இருந்த பொருட்களை காலி செய்த விட்டு, ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடித்து அகற்றியுள்ளனர். 27 ஆண்டுகளுக்கு பின், 7.62 சென்ட் 'ரிசர்வ் சைட்' மீட்கப்பட்டு இருக்கிறது. இவ்விடத்தின் தற்போதைய மதிப்பு, 3.5 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜெனரேட்டர் அறை மற்றும் 'டோபிகானா' செயல்பட்ட இடங்களையும் மீட்க வேண்டியுள்ளது. இப்பகுதிகளையும் மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் மீட்டு, மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் குமாரிடம் கேட்டதற்கு, ''சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றப்படும்,'' என்றார்.

