/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; கோர்ட் உத்தரவால் களமிறங்கிய அதிகாரிகள்
/
நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; கோர்ட் உத்தரவால் களமிறங்கிய அதிகாரிகள்
நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; கோர்ட் உத்தரவால் களமிறங்கிய அதிகாரிகள்
நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; கோர்ட் உத்தரவால் களமிறங்கிய அதிகாரிகள்
ADDED : ஜன 07, 2025 06:47 AM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பொள்ளாச்சியை சேர்ந்த தன்னார்வலர், நகராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நகராட்சி கமிஷனர் கணேசன் கடைக்காரர்களுக்கு வழங்கிய நோட்டீஸில், நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பெருமாள் செட்டி வீதி, பழைய பஸ் ஸ்டாண்ட் ரோடு, பூமார்க்கெட் வீதி, கடைவீதி, எஸ்.எஸ்., கோவில் வீதி, சத்திரம் வீதி, கந்தசாமி பார்க் ரோடு, தெப்பக்குளம் வீதி, நேதாஜி ரோடு, மகாலிங்கபுரம் ரோடு மற்றும் பொள்ளாச்சி நகராட்சி தெருக்கள், நகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் தற்காலிகமாகவும், கட்டடம் கட்டி நிரந்தரமாகவும் மற்றும் தளவாடங்கள் வைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது, நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 பிரிவு, 128ன் படி தண்டனைக்குரியதாகும்.எனவே, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தை, அறிவிப்பு கிடைத்த, ஏழு நாட்களுக்கு இடித்து அகற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் ஆக்கிரமிப்புகளை இடித்து அப்புறப்படுத்துவதுடன், அதற்கேற்படும் செலவுகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்.
இச்செயலுக்காக சட்டப்பூர்வ வழக்கு தொடர்ந்து குற்றம் என நிருபிக்கப்பட்டால், அதிக பட்சம், 50 ஆயிரம் ரூபாய் அபராத தொகையுடன், ஓர் ஆண்டு முதல் மூன்றாண்டு வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர். நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், போலீசார் துணையுடன், வாகனங்களில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நகரின் பல இடங்களில் ஆக்கிரமிப்பாளர்கள், தாங்களாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர். அகற்றாத இடங்களில், அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'ஆக்கிரமிப்பு அகற்றிக்கொள்ள முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதையும் மீறி, ஆக்கிரமிப்பு அகற்றாத இடங்களில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது,' என்றனர்.