sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ரிப்போர்ட்டர் லீக்ஸ்

/

 ரிப்போர்ட்டர் லீக்ஸ்

 ரிப்போர்ட்டர் லீக்ஸ்

 ரிப்போர்ட்டர் லீக்ஸ்


ADDED : பிப் 02, 2026 04:59 AM

Google News

ADDED : பிப் 02, 2026 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்ம ஊரு அ.தி.மு.க.,வோட கோட்டைஆனா, கட்சிக்கு இல்ல நிரந்தர 'கோட்டை' பொள்ளாச்சி யூனியன் ஆபீஸ் அருகே அ.தி.மு.க., கட்சி நண்பரை சந்தித்த போது, 'நம்ம ஊருல தொடர்ந்து நாங்க தான் ஜெயிக்கறோம், ஆனாலும் பிரயோஜனம் இல்லைனு' பேச ஆரம்பித்தார். அவர், பேசியதில் இருந்து...

அ.தி.மு.க. கட்சி துவங்கி 54 வருஷமாச்சு. இதுவரை நடந்த, 16 சட்டசபை தேர்தல்ல, 10 முறை அ.தி.மு.க., தான் ஜெயிச்சிருக்குனு பெருமையா சொல்லிக்கிறோம். இதனால, பொள்ளாச்சிய அ.தி.மு.க. கோட்டைனு சொல்றோம்.

ஆனா, அடிமட்ட தொண்டர்கள் மனசுல ஒரு தீராத ஏக்கம் இருந்துகிட்டே இருக்குது. என்னதான் கட்சிக்கு பெருமை சேர்ந்தாலும், கட்சிக்காரங்க உட்கார்ந்து பேச கட்சிக்குனு நிரந்தர அலுவலகம் இல்ல. இந்த ஏக்கத்த இதுவரை ஜெயிச்ச யாரும் போக்கவே இல்ல.

நகர கட்சி அலுவலகம் வாடகை கட்டடத்தில் தான் செயல்படுது. கட்சி அலுவலகத்துக்கு ஒரு நிரந்தர கட்டடம் கட்டி, அங்கு கட்சி கூட்டம் நடத்தணும். கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆருக்கும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சிலை வைக்கணுங்கறது தான் கட்சிக்காரங்களோட ஆசை.

பொள்ளாச்சியில, மற்ற கட்சிகளுக்கு எல்லாம் சொந்தமாக கட்சி அலுவலகம் இருக்கு. ஆனா, இதுவரைக்கும் அ.தி.மு.க., அலுவலகத்துக்கு இடம் வாங்கி நிரந்தர கட்டடம் கட்ட யாருமே முயற்சிக்கலைங்கறது தான் அடிமட்ட தொண்டர்களோட ஆதங்கம்னு, சொல்லி முடித்தார்.

சீட்டு வாங்கறது இருக்கட்டும்மொதல்ல ஊருக்குள்ள வாங்க! உடுமலை ஏரிப்பாளையத்துல, திருப்பூர் தெற்கு மாவட்ட காங்., சார்பில், முப்பெரும் விழா நடத்துனாங்க. வழக்கம் போல, தலைவர்கள் சொன்ன நேரத்துக்கு வரல, காத்திருந்த தொண்டர்கள் பரவலாக வெளியில் நின்று கட்சி நிலவரத்தை பேசிக்கிட்டு இருந்தாங்க. அவர்கள் பேசிக்கொண்டதில் இருந்து...

தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் இந்த மூணு தொகுதில ஒன்னு, நம்ம கட்சிக்கு கூட்டணில வாங்க முக்கிய தலைவருங்க, வேலைபார்த்துட்டு இருக்காங்க என்றார் ஒருவர்.

அதற்கு மற்றவர், 'தேர்தல் வந்தாத்தான் நம்ம தலைவருங்க வேலை ஸ்பீடு பிடிக்குது. இல்லாட்டி, தொகுதி பக்கம் யாரும் எட்டிக்கூட பார்க்கமாட்டாங்க. போன தடவ தேர்தல்ல போட்டியிட்டவரு, 'உடுமலையில உங்களோட எப்பவும் இருப்பேன்' அப்படின்னு சொன்னாரு. தேர்தல் தோல்விக்கு அப்புறம் சில தடவ இந்த பக்கம் வந்துட்டு போனாரு.

இப்ப புதுசா கட்சி நிர்வாகிங்க நியமிச்சு இருக்காங்க. புது கோஷ்டிக்கும், பழைய கோஷ்டிக்கும் பிரச்னையை பேசி முடிக்கவே பல மாசமாகும். அதுக்குள்ள தேர்தலே வந்துரும்.

இத்தனை பிரச்னையை வைச்சுட்டு, 'சீட்' மட்டும் வாங்கிட்டு வந்தா எப்படி ஜெயிக்கறது. முதல்ல ஊரு, ஊருக்கு தலைவருங்க வந்து தொண்டர்கள சந்திக்கணும். அப்புறமா தேர்தல்ல 'சீட்' வாங்கற வேலையெல்லாம் பார்க்கலாம்.

மொதல்ல இந்த கூட்டம் குழப்பம் இல்லாம நடக்குதான்னு பார்ப்போம். வழக்கம் போல நம்மள கோஷம் போடுறதுக்கு மட்டும் தான் கூப்பிடுவாங்க. மத்ததையெல்லாம் அவங்களே பார்த்துக்குவாங்கனு, ஆதங்கத்தை கொட்டினார். விழா முடிந்ததும் நாமும் அங்கிருந்து கிளம்பினோம்.

சட்டசபை எலக்சனுக்காக கலெக்சன்ஆளும்கட்சிக்கு அதிகாரிகள் ஜால்ரா வால்பாறை நகராட்சியில், தேர்தல் செலவுக்காக ஆளும்கட்சிக்காரங்க கலெக்சன் பண்ணுறாங்கனு, பஸ் ஸ்டாண்டில் இருவர் பேசிக்கொண்டனர். அவர்களது பேச்சை கவனித்தேன்.

வால்பாறை நகராட்சியில, அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு 'மேக்கப்' போட்டு, ஆளும்கட்சிக்காரங்க பல கோடி ரூபாய் சுருட்டிட்டாங்க. இதை எதிர்த்து ஆளும்கட்சிக்காரங்களே போராட்டமும் பண்ணிணாங்க.

அதுக்கப்புறம், அதிருப்தி கவுன்சிலர்கள எல்லாம் அழைத்து கமிஷனர் பேச்சு நடத்தினாரு. அவங்களுக்கு கொடுக்க வேண்டியதை எல்லாம் கொடுத்து சரிகட்டிட்டரு. இப்ப என்னன்னா, சட்டசபை தேர்தல் செலவுக்கு ஆளும்கட்சிக்காரங்க கலெக்சன் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.

வளர்ச்சி பணிங்கற பேருல, பில் அதிகமா போட்டும், செய்யாமலே செய்ததா கணக்கு காட்டியும், நகராட்சி நிதிய சுருட்ட ஆரம்பிச்சுட்டாங்க. கடந்த காலத்துல, 80 கோடி ரூபாய் வரை நகராட்சியில ஊழல் நடந்திருக்குனு புகார் கிளம்பிய போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கல.

அதனால, இப்ப, ஆளும்கட்சியினர் துணிந்து நகராட்சி நிதியை சுருட்டுறாங்க. எந்த பிரச்னையும் இல்லாம நிர்வாகம் நடக்கணும்னு, ஆளும்கட்சியினர் சொல்லறதுக்கெல்லாம் அதிகாரிகள் ஜால்ரா தட்டியிட்டு இருக்காங்க. எந்த வளர்ச்சி பணியும் உருப்படியா நடக்கலைனு பேசிக்கிட்டாங்க.

'பாட்டிலுக்கு 10 ரூபா' தெரியும்'கூல்லிப்' 150க்கு விக்கறாங்க தெரியுமா கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் அருகே, ரோட்டில் போதையில் இருந்த நபரை ரோட்டோரத்தில் பாதுகாப்பாக அமர வைத்துக்கொண்டிருந்த நண்பரிடம் பேச்சு கொடுத்தேன்.

வரவர நம்ம ஊர்ல மது குடிக்கிறவங்க அதிகமாயிட்டே போறாங்க. சின்ன பசங்க எல்லாம் 'சரக்கு' அடிச்சுட்டு அலப்பற பண்ணுறாங்க. காலேஜ் பசங்க வெளியில ரூம் எடுத்து தங்கிட்டு, போதையில பைக்குல பறக்குறாங்க.

இது மட்டுமா, கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில இருக்குற ஒரு தனியார் பாரில் மதுவுடன், 'கூல்லிப்' விற்பனை ஜோரா நடக்குது. மது விற்பனை ஆகுற அளவுக்கு 'கூல்லிப்' விற்பனையும் நடக்குது.

பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமா வாங்குறாங்கனு எல்லாருக்கும் தெரியுது. இத பெருசா பேசுறாங்க. ஆனா, தடை செய்யப்பட்ட 'கூல்லிப்' பாக்கெட் 150 ரூபாய் வரை அதிக காசு குடுத்து வாங்குறாங்க. தடை விதித்ததை பயன்படுத்தி அதிக விலைக்கு விக்கறாங்க.

இதெல்லாம், நம்ம ஊரு இளைஞர்களையும், வடமாநிலத்துக்காரங்களையும் குறி வச்சு நடக்குது. இதுக்கு பின்னாடி, அரசியல் பேதமின்றி எல்லா கட்சியினரும் இருக்காங்க.

இதெல்லாம் போலீசுக்கு தெரியாதா, இல்ல தெரியாத மாறி இருக்கறாங்களானு தெரியல. கஞ்சாவை பிடிக்கிற மாதிரி 'கூல்லிப்'பையும் பிடிச்சா நல்லா இருக்கும்னு சொன்னார்.

இளைஞர்கள களமிறக்கி பழைய குற்றவாளிக ரவுடிசம் பண்ணுறாங்க!

உடுமலையில், நண்பரை சந்தித்த போது, நம்ம ஊருல ரவுடிசம் அதிகமாயிருச்சு, காலேஜ் பசங்கள கோதாவுல இறக்கி விட்டு விளையாடுறாங்கனு, ஆதங்கப்பட்டார். என்னனு விசாரிச்சேன். உடுமலையில, கொலை, கொள்ளை, அடிதடி வழக்குகள்ல தொடர்புள்ள குற்றவாளிகள் சிலர், அரசியல் கரை வேஷ்டி கட்டிக்கிட்டு தோரணையா வலம் வர்றாங்க. அவங்ள போலீசாரும் கண்டுக்கறதில்ல. நிலம் அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்துனு பல்வேறு குற்றச்செயல்கள்ல தொடர்ந்து ஈடுபடுறாங்க. இப்பெல்லாம், அவங்க நேரடியா களமிறங்காம, இளம் தலைமுறையினர முன்னுக்கு நிறுத்துறாங்க. கல்லுாரி மாணவர்கள், 'ஜிம்'களில் பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்கள, 'பவுண்சர்'கள போல பயன்படுத்தறாங்க. போன வாரம், ருத்திராபாளையத்தில், 13 ஏக்கர் நிலப்பிரச்னையில, வீட்டை இடித்து, பஞ்சமி நிலத்தை கைப்பற்ற, நுாற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களை, அந்த கும்பல் களமிறக்கியது. அவங்க, சம்பந்தபட்ட வீட்டில் இருந்தவர்களை, நிர்வாணமாக கட்டி வைத்து, சிறுநீர் அடித்து சினிமா சம்பவம் போல கொடுமைப்படுத்தியிருக்காங்க. தகவல் கிடைத்து, கிராம மக்கள் ரவுடி கும்பலை சுற்றி வளைத்ததும், தப்பிக்க முடியாமல் திணறி, அமராவதி ஆத்துல குதிச்சாங்க. ஆத்துல குதிச்ச ஒருத்தர காணவில்லைனு போலீசார் தேடுறாங்க. சினிமாவை மிஞ்சும் அளவுக்கு உடுமலையில கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சம்பவங்கள பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இனியும் போலீசார் கண்டுக்காம இருந்தா, உடுமலை ரவுடிசத்துக்கு புகலிடமா மாறிடும். உளவு பிரிவு போலீசாரும், மாவட்ட போலீஸ் அதிகாரிகளும் உஷார இல்லாட்டி, ஏதாவது பெரிய சம்பவம் நடந்திடும்னு, சொன்னார்.








      Dinamalar
      Follow us