/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியல்
/
குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியல்
ADDED : மார் 19, 2024 09:11 PM
கோவில்பாளையம்;குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து, கீரணத்தத்தில் சாலை மறியலில் பொது மக்கள் ஈடுபட்டனர்.
கீரணத்தம் ஊராட்சி, கல்லுக்குழி பகுதியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 1,200 தூய்மை பணியாளர்கள் வசித்து வருகின்றனர். இங்கே கடந்த 13 நாட்களாக குடிநீர் சப்ளை ஆகவில்லை.
இது குறித்து ஊராட்சி அலுவலகம் மற்றும் எஸ். எஸ்.குளம் ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இதனால் ஆவேசமடைந்த அப்பகுதியை சேர்ந்த 200 பேர் கல்லுக்குழி பஸ் ஸ்டாப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் பேச்சு நடத்தினர். அதிகாரிகளிடம் பேசி விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். மறியலால் ஒன்றே கால் மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பொதுமக்கள் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

