/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறிச்சி பிரிவு சந்திப்பில் அமைகிறது 'ரவுண்டானா' ரூ.1.8 கோடி ஒதுக்கியது மாநில நெடுஞ்சாலைத்துறை
/
குறிச்சி பிரிவு சந்திப்பில் அமைகிறது 'ரவுண்டானா' ரூ.1.8 கோடி ஒதுக்கியது மாநில நெடுஞ்சாலைத்துறை
குறிச்சி பிரிவு சந்திப்பில் அமைகிறது 'ரவுண்டானா' ரூ.1.8 கோடி ஒதுக்கியது மாநில நெடுஞ்சாலைத்துறை
குறிச்சி பிரிவு சந்திப்பில் அமைகிறது 'ரவுண்டானா' ரூ.1.8 கோடி ஒதுக்கியது மாநில நெடுஞ்சாலைத்துறை
ADDED : நவ 14, 2024 05:16 AM

கோவை: கோவை, கோட்டைமேடு வின்சென்ட் ரோடு வழியாக வாலாங்குளம் ரோடு அடையும் இடத்தில், 'ரவுண்டானா' அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோல், குறிச்சி பிரிவு சந்திப்பில் ரூ.1.8 கோடியில் 'ரவுண்டானா' அமைக்கும் பணி துவங்க இருக்கிறது.
உக்கடம் - ஆத்துப்பாலம் வரை மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இத்திட்ட நிதியில், உக்கடம் பஸ் ஸ்டாண்ட் - செல்வபுரம் ரோடு சந்திப்பு, உக்கடம் பஸ் ஸ்டாண்ட் - வாலாங்குளம் ரோடு சந்திப்பு, வின்சென்ட் ரோடு - வாலாங்குளம் ரோடு சந்திப்பு மற்றும் ஆத்துப்பாலம் சந்திப்பு ஆகிய இடங்களில் 'ரவுண்டானா' அமைக்க வேண்டும்.
ஆத்துப்பாலம் சந்திப்பில் 'ரவுண்டானா' அமைக்கப்பட்டு, செயற்கை புல் பதிக்கப்பட்டிருக்கிறது. உக்கடம் போலீஸ் ஸ்டேஷன் அருகே கான்கிரீட் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது; இன்னும் மண் கொட்டி சமப்படுத்தவில்லை. வின்சென்ட் ரோடு - வாலாங்குளம் ரோடு சந்திப்பில் 'ரவுண்டானா' அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, மண் கொட்டி, சமப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதேபோல், குறிச்சி பிரிவில் 'ரவுண்டானா' அமைக்க வேண்டியுள்ளது. ஏனெனில், ஆத்துப்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள், பொள்ளாச்சி ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், போத்தனுார் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் குறிச்சி பிரிவு சந்திப்பில் சந்திக்கின்றன.
அப்பகுதியில் தானியங்கி சிக்னல் அமைத்திருந்தாலும், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
பொள்ளாச்சி ரோட்டில் வரும் வாகன ஓட்டிகள், 'ரெட்' சிக்னல் விழுந்திருந்தாலும் காத்திருக்காமல் செல்கின்றனர்; அச்சமயத்தில் போத்தனுார் ரோட்டில் இருந்து வரும் வாகன ஓட்டிகளால் விபத்து ஏற்படுகிறது. குறிச்சி பிரிவில் இருந்து போத்தனுார் சந்திப்பு வரை நான்கு வழிச்சாலையாக்கும் பணியின்போது, 'ரவுண்டானா' அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
தற்போது, ரூ.1.8 கோடி ஒதுக்கப்பட்டு, 'டெண்டர்' இறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தி கூறுகையில், ''உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலத் திட்டத்தில் தேவையான இடங்களில் 'ரவுண்டானா' அமைக்கும் பணி நடந்து வருகிறது. குறிச்சி பிரிவு சந்திப்பில் ரூ.1.8 கோடியில் 'ரவுண்டானா' அமைக்கும் பணி விரைவில் துவங்கும். அப்பகுதியில் உள்ள மேடு பள்ளங்கள் சரி செய்யப்பட்டு, வாகன போக்குவரத்து இலகுவாக இருக்கும் வகையில் 'ரவுண்டானா' அமைக்கப்படும்,'' என்றார்.

