/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்சார சிக்கனத்தால் கிடைத்தது.. ரூ.4 கோடி! . திட்டமிட்டு சேமித்தது மாநகராட்சி
/
மின்சார சிக்கனத்தால் கிடைத்தது.. ரூ.4 கோடி! . திட்டமிட்டு சேமித்தது மாநகராட்சி
மின்சார சிக்கனத்தால் கிடைத்தது.. ரூ.4 கோடி! . திட்டமிட்டு சேமித்தது மாநகராட்சி
மின்சார சிக்கனத்தால் கிடைத்தது.. ரூ.4 கோடி! . திட்டமிட்டு சேமித்தது மாநகராட்சி
ADDED : பிப் 15, 2026 06:09 AM

கோவை : பல்வேறு வழிகளில் மின்சாரம் வீணாவது, தேவையின்றி அபராதம் செலுத்துவது, பயனற்ற இணைப்புகளை துண்டிப்பது உள்ளிட்ட சேமிப்பு வழிமுறைகளை பின்பற்றி ரூ.4 கோடி சேமித்துள்ளது கோவை மாநகராட்சி.
மாநகராட்சி பிரதான சாலைகள் மற்றும் வீதிகளில் மின் விளக்குகளை பராமரிக்கிறது. இவை தவிர, 100 வார்டுகளிலும் சுகாதார ஆய்வாளர் அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி பள்ளிகள், வீதிதோறும் போர்வெல் அமைத்து உப்புத்தண்ணீர் சப்ளை செய்வதற்கு என பலவகைகளில் 11,702 மின் இணைப்புகள் பெற்றிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டண செலவு பல கோடி ரூபாயை தாண்டுகிறது. மின் செலவை குறைக்க ஆய்வு செய்யப்பட்டது. ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரிகளை நியமித்து, 'எலக்ட்ரிக்கல் விங்க்' உருவாக்கப்பட்டது. பெறப்பட்ட ஒவ்வொரு இணைப்பும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
தேவையற்ற இணைப்புகளை நிரந்தரமாக துண்டிப்பது, அபராதம் செலுத்துவதை தவிர்ப்பது, மின் செலவை தவிர்க்க முயற்சி எடுக்கப்பட்டது. 2,635 இணைப்புகளுக்கு உயரழுத்த மின் சப்ளை அவசியமில்லை என கண்டறியப்பட்டது. அவற்றை துண்டித்த வகையில், ஆண்டுக்கு ரூ.1.68 கோடி சேமிக்கப்பட்டது.
அடுத்த கட்டமாக, 697 இணைப்புகள் இனி தேவையில்லை என முடிவெடுத்து துண்டிக்கப்பட்டது. இதன் வாயிலாக, 63.53 லட்சம் ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டது. வைப்புத்தொகை திரும்ப கேட்டதில், ரூ.1.36 கோடி கிடைத்தது. 96 இணைப்புக்கான கட்டண விகிதம் மாற்றியதில், ரூ.39.27 லட்சம் மீதமானது. இத்தகைய நடவடிக்கை மூலமாக, 4 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டு உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மின் இணைப்புகளுக்காக தனியாக போர்டல் உருவாக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி பெயரில் பெறப்பட்டுள்ள அனைத்து இணைப்பு எண்களும் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இதனால் எந்தெந்த எண்களுக்கு எந்தெந்த மாதம் கட்டணம் செலுத்த வேண்டும் என்கிற விவரம் அறியலாம். மாதம் தவறாமல் சம்பந்தப்பட்ட அலுவலர், அதற்கான தொகை செலுத்த வேண்டும். எந்தவொரு காரணத்துக்கும் அபராதம் வரக்கூடாது. எந்த இணைப்புக்கு அதிக மின் கட்டணம் செலவாகிறது என்பதை கண்டறிந்து, அதற்கான காரணங்கள் ஆய்வு செய்யப்படும்' என்றனர்.

