அனுமதியின்றி அரசியல் கட்சி கொடிகள் கட்டினால் ரூ. 500 அபராதம்! ஆலோசனை கூட்டத்தில் வருவாய்த்துறை அறிவிப்பு
அனுமதியின்றி அரசியல் கட்சி கொடிகள் கட்டினால் ரூ. 500 அபராதம்! ஆலோசனை கூட்டத்தில் வருவாய்த்துறை அறிவிப்பு
UPDATED : ஆக 25, 2026 04:35 PM
ADDED : ஆக 25, 2026 03:10 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதிகளில் விபத்துகளை தவிர்க்க, அரசியல் கட்சியினர் கொடிகள் கட்டுவதற்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது. இனி கொடி வைத்தால் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். இல்லையெனில், அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும், என, அரசியல் கட்சியினருக்கான ஆலோசனை கூட்டத்தில், வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி நகரில் விழாக்கள் நடத்துவோர், நிகழ்ச்சிகளுக்கான அறிவிப்புகளை பிளக்ஸ்களாக பொதுமக்கள் நடமாட்டம் உள்ள, கோர்ட் வளாகம் அருகே, பஸ் ஸ்டாண்ட், கோட்டூர் ரோடு, மகாலிங்கபுரம் ஆர்ச் உள்ளிட்ட இடங்களில் வைக்கின்றனர்.
விபத்து அபாயம் அனுமதி பெறாமல் வைக்கப்படும் பிளக்ஸ்கள், நீண்ட நாட்களுக்கு அகற்றாததால் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும், கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வரும் போது, அவர்களை வரவேற்க கொடிகளை அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் கட்டுகின்றனர். ரோட்டேராம், ரவுண்டானா உள்ளிட்ட இடங்களில் கொடிகள் கட்டப்படுவதால் விபத்துகள் ஏற்படுகிறது.
மையத்தடுப்புகளில் கட்டப்படும் கொடிகள், காற்றில் சாய்ந்து வாகன ஓட்டுநர்கள் மீது விழுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கொடி கம்பங்கள், பேனர்கள் வைக்க அரசு விதிமுறைகள் வகுத்துள்ளது. அதை பின்பற்றுவது குறித்து பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் அரசியல் கட்சியினருக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டரின் நேர்முக உதவியாளர் வாசுதேவன் முன்னிலை வகித்து, சட்ட விதிமுறைகள் குறித்து விளக்கினார்.
உடனே அகற்றணும்! வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பிளக்ஸ் வைப்பது மற்றும் கொடிகள் கட்டுவது குறித்து கோர்ட் உத்தரவை பின்பற்றி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு துறைகளுக்கு சொந்தமான பொது இடத்தில் கொடி கட்டுவதற்கும் முறையான அனுமதி பெற வேண்டும். விழா நடைபெறும் ஒரு வாரத்துக்கு முன்பு, சப் - கலெக்டர் அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். ஒரு கொடிக்கு, ஐந்து ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட துறை வாயிலாக ஆய்வு செய்து, மக்களுக்கு இடையூறு உள்ளதா என பார்வையிட்டு அனுமதி அளிக்கப்படும். விழா முடிந்ததும் அடுத்த நாளுக்குள் கொடிகள் அகற்ற வேண்டும். அனுமதியின்றி கொடிகள் கட்டினால், ஒரு கொடிக்கு, 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். தனியார் நிலத்தில் கொடி கட்ட வேண்டுமென்றாலும் முறையாக அனுமதி பெற வேண்டும்.
மாவட்ட அளவிலான அரசியல் கட்சியினருக்கான கமிட்டியில் ஒப்புதல் பெற்று வைக்கலாம். போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத அளவில் பிளக்ஸ், கொடி கட்ட வேண்டும்.
நிபந்தனை நிகழ்ச்சியானது, அனுமதிக்கப்பட்ட தேதி மற்றும் இடத்தில் மட்டுமே நடைபெற வேண்டும். பஸ் ஸ்டாண்ட் நுழைவுவாயில், வெளியேறும் பாதை, நடைபாதை மற்றும் ரோட்டை எவ்வகையிலும் ஆக்கிரமிக்க கூடாது. பேனர்கள், கொடிக்கம்பங்கள், போக்குவரத்து சிக்னல்கள், சாலை பெயர் பலகைகள் அல்லது வாகன ஓட்டுநர்கள் பார்வையை மறைக்கும் வகையில் அமைக்க கூடாது.
மின்கம்பங்கள், தெருவிளக்கு கம்பங்கள், மரங்கள், அரசு கட்டடங்களில் பேனர்கள் அல்லது கொடிகள் கட்டக்கூடாது. ஒலி பெருக்கி பயன்படுத்த வேண்டுமெனில் காவல்துறையிடம் தனி அனுமதி பெற்று, அனுமதிக்கப்பட்ட நேரத்தை பின்பற்ற வேண்டும். பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு வழங்க வேண்டும்.
நிகழ்ச்சி முடிந்ததும் பிளாஸ்டிக் கழிவுகள், உணவுக்கழிவுகள் முறையாக அகற்றப்பட வேண்டும். மதம், ஜாதி, இனம் அல்லது அரசியல் வெறுப்பை துாண்டும் வாசகங்கள், படங்கள் அல்லது கோஷங்கள் இடம் பெறக்கூடாது. எவ்விதமான சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டாலும் அதற்கான முழு பொறுப்பை ஏற்பாட்டாளர்கள் ஏற்க வேண்டும்.
போலீஸ், உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும் அனைத்து நிபந்தனைகளும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். நகரப்பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க எவ்வித அனுமதியும் இல்லை. இது குறித்து நகராட்சியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
