ADDED : அக் 14, 2025 09:32 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், கோவிந்தம்பிள்ளை மயானத்தில், நகராட்சிக்கு சொந்தமான சாந்தி வனம் எரிவாயு தகனக்கூடம் (கிரிமிட்டோரியம்) உள்ளது.
இதை மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கத்தினர், நிர்வாகம் செய்து வருகின்றனர். எரிவாயு தகன கூடம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால், இதை சீரமைக்க நிர்வாகம் முடிவு செய்தது.
கடந்த மாதம் 20ம் தேதியிலிருந்து, சாந்தி வனத்தில் சீரமைப்பு பணிகள் துவங்கியதால் மூடப்பட்டது. எரிவாயு தகன கூடத்தில் அடுப்பு, மின் மோட்டார்கள், உடலை தாங்கிச் செல்லும் டிராலி ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளனர். சாந்தி வனத்தில் நேற்று முன்தினம் மதியம் சிறப்பு பூஜை செய்த நிர்வாகத்தினர், மீண்டும் எரிவாயு தகனக் கூடத்தை இயக்கினர்.
வழக்கம் போல் சாந்தி வனம் இயங்கும் என, நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
