/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புகை... வனத்துக்கும் 'பகை' தான்!
/
புகை... வனத்துக்கும் 'பகை' தான்!
ADDED : பிப் 21, 2026 06:02 AM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு உட்பட்ட இடங்களில், 63 கி.மீ., துாரம் வரை தீத்தடுப்பு கோடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் வனச்சரகம், சுமார் 9,000ம் எக்டேர் பரப்பில் உள்ளது. கோடை நெருங்கும் நிலையில், வெயிலின் தாக்கத்தால் காய்ந்த இலைகள், செடிகள் போன்றவற்றால், தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
இதை தடுக்க, மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில், தீத்தடுப்பு கோடுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. வனப்பகுதிக்கு உட்பட்ட சாலையோரங்களில், பீடி, சிகரெட் போன்றவைகளை புகைக்கக் கூடாது எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிக்குமார் கூறியதாவது:
மேட்டுப்பாளையம் வனப்பகுதியையொட்டி உள்ள சாலையோரங்களில், ஊட்டி, கோத்தகிரி பகுதிகளுக்கு செல்வோர், பீடி, சிகரெட் போன்றவைகளை புகைத்து வீசி சென்றால், வனத்தில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. கோடைகாலம் நெருங்கும் நிலையில், செடிகள், புற்கள், மரங்கள் காய்ந்து வருகின்றன.
ஊட்டி, கோத்தகிரி உட்பட பகுதிகளுக்கு செல்வோர், மேட்டுப்பாளையம் வனப்பகுதியையொட்டி சாலையோரங்களில் பீடி, சிகரெட் போன்றவைகளை புகைக்கக் கூடாது. மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு உட்பட்ட இடங்களில், 63 கி.மீ., தூரம் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது.
வனப்பகுதி எல்லையோர கிராம மக்களிடம், குப்பையை வன எல்லையோரம் கொட்டி எரிக்கக் கூடாது எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம்.
தீ ஆபத்து விளைவிக்கும் எந்த ஒரு செயலிலும் யாரும் ஈடுபடக் கூடாது. அத்துமீறி வனத்துக்குள் செல்லக் கூடாது; மீறினால் கைது செய்வோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.---

