/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இவ்வளவு திறமை ஒளிந்திருக்கிறதா! கலைத்திருவிழாவில் நிரூபணம்
/
இவ்வளவு திறமை ஒளிந்திருக்கிறதா! கலைத்திருவிழாவில் நிரூபணம்
இவ்வளவு திறமை ஒளிந்திருக்கிறதா! கலைத்திருவிழாவில் நிரூபணம்
இவ்வளவு திறமை ஒளிந்திருக்கிறதா! கலைத்திருவிழாவில் நிரூபணம்
ADDED : அக் 29, 2025 12:39 AM

கோவை: 'பசுமையும், பாரம்பரியமும்' என்ற மையக்கருத்துடன் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான, மாவட்ட அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடந்து வருகின்றன.
பள்ளி, வட்டாரம் என பல சுற்றுகளில் தங்கள் திறமைகளால் முத்திரை பதித்த மாணவர்கள், இப்போது மாவட்ட மேடைகளில், பட்டையைக் கிளப்பி வருகின்றனர்.
நான்கு நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில், இரண்டாம் நாளான நேற்று, 9, 10ம் வகுப்பு மாணவர்கள், 1,300 பேர் பங்கேற்றனர். மாணவர்களின் உற்சாகமும், ஆரவாரமும் அரங்கையே அதிர வைத்தது. குறிப்பாக, நடனப் பிரிவில் அனல் பறந்தது.
கலக்கிய கட்டக்கால் நடனம் மணியகாரம்பாளையம் மாநகராட்சிப் பள்ளி மாணவிகள் ஆடிய, 'கட்டக்கால் நடனம்' பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
அவர்களைத் தொடர்ந்து, வடகோவை மாநகராட்சிப் பள்ளி மாணவிகள், ஒரு 'மெகா காம்போ'வையே மேடையில் அரங்கேற்றினர். கரகாட்டம், பொய்க்கால் குதிரை, காவடியாட்டம், மயிலாட்டம் என அத்தனை பாரம்பரியக் கலைகளையும், ஒரே நடனத்தில் கொண்டு வந்து அசத்தி விட்டனர்.
கணுவாய் பள்ளி மாணவி தனி நபர் நடனத்தில், 'ஷோ ஸ்டீலர்' என்றால் அது கணுவாய் அரசுப் பள்ளி மாணவி நிவிதா தான். தலையில் கரகத்தைச் சுமந்தபடி, துளி கூடத் தளும்பாமல் அவர் ஆடிய ஆட்டம், அனைவரையும் வியக்க வைத்தது!
நடனம் மட்டுமல்ல, இசைப் பிரிவிலும் மாணவர்கள் சக்கைப்போடு போட்டனர். ஒருபுறம் வீணை, மிருதங்கத்தின் பாரம்பரிய நாதம், மறுபுறம் ட்ரிபிள் டிரம், பறையின் அதிரடித் தாளம், கூடவே வில்லுப் பாட்டின் கிராமிய மணம் என... மாணவர்கள் இசை மழையில் நனைய செய்தனர்.
கலையிலும் குறையில்லை கலைப்படைப்புகளின் பக்கமும் குறைவில்லை. சாதாரணக் காகிதக் கூழ்கள் அற்புதமான கலைப்பொருட்களாகவும், காய்கறி கண் கவரும் சிற்பங்களாகவும் உருமாறியிருந்தன. பானை ஓவியம், மணல் சிற்பம், ரங்கோலி, கேலிச் சித்திரம் என மாணவர்கள் தங்கள் கற்பனைத் திறனுக்கு வண்ணங்களால் உயிர் ஊட்டியிருந்தனர்.
காட்டுவாசிகள் நடனம் பொம்மலாட்டம் பிரிவில், உயிரற்ற பொம்மைகளுக்குக் கயிறுகளின் வழியே உயிர் ஊட்டி, கதை சொன்ன மாணவர்களின் திறமையை, பாராட்டியே ஆக வேண்டும்.
கண்ணம்பாளையம் பள்ளி மாணவிகளின், 'காட்டுவாசிகள் நடனம்' ஒரு கணம் நம்மை வேறு உலகிற்கே அழைத்துச் சென்றது.
சிலப்பதிகாரத்தில், வழக்குரை கதையில் கண்ணகி பாண்டியன் நெடுஞ்செழியனிடம் வழக்கு தொடுத்து வெற்றிபெறும் கதையை, தத்ரூபமாக நடித்து அசத்தினர், கணுவாய் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள்.
மொத்தத்தில், மாணவர்களின் புதைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்த, ஒரு பெரிய 'கொண்டாட்டமாக' அமைந்துள்ளது கலைத்திருவிழா!

