/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பராமரிப்பு இன்றி புதரானது ஜோதிநகர் பூங்கா நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
/
பராமரிப்பு இன்றி புதரானது ஜோதிநகர் பூங்கா நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
பராமரிப்பு இன்றி புதரானது ஜோதிநகர் பூங்கா நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
பராமரிப்பு இன்றி புதரானது ஜோதிநகர் பூங்கா நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜன 30, 2025 11:01 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஜோதிநகர் பூங்கா போதிய பராமரிப்பின்றி புதர் மண்டி காணப்படுகிறது. அவற்றை பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி ஜோதிநகரில், 4.15 ஏக்கர் பரப்பளவில் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் பூங்கா அமைக்கப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடைபயிற்சி மேற்கொள்ள, பூங்காவுக்கு உள்ளே மற்றும் வெளியே அகலமான நடைபாதை, சிறுவர்கள் பூங்கா அமைக்கப்பட்டது.
நறுமண தாவரங்கள், மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டன. குழந்தைகளுக்கான விளையாட்டு திடல், நிழற்கூரைகள், மின் விளக்குகள், கல்லால் இருக்கைகள் அமைக்கப்பட்டன. கேண்டின், கழிப்பிடம் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது.
அ.தி.மு.க., ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு கட்டப்பட்ட பூங்கா, தி.மு.க., ஆட்சியில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின், பூங்கா அமைப்பதற்காக வழங்கிய மின் இணைப்பு பட்டியல் மாற்றப்படாமல் இருந்ததால், மின்கட்டணம் அதிகளவு உயர்ந்தது.
பூங்காவை பராமரிப்புக்கு எடுத்தவரால் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின், நகராட்சி நிர்வாகம் வாயிலாக, மின்வாரியத்துக்கு செலுத்த வேண்டிய மின்கட்டண நிலுவையில், குறிப்பிட்ட தொகை மட்டும் செலுத்தப்பட்டது.
இதையடுத்து, மின் இணைப்பு கிடைத்ததால் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால், சில மாதங்களிலேயே மீண்டும் பூங்காவுக்கு பூட்டு போடப்பட்டது. மீண்டும் மின் பாக்கியால் மூடப்பட்ட பூங்கா, தற்போது நகராட்சி வாயிலாக திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால், முறையான பராமரிப்பின்றி பூங்காவில் இருந்த செடிகள் வாடியுள்ளன.
அலங்கோலம்
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சியில் மக்களின் பொழுது போக்கு அம்சமாக ஜோதிநகர் பூங்கா மாறியது. இங்கு குழந்தைகள் விளையாட்டு திடல்களில், விளையாடி மகிழ்ந்தனர். வாக்கிங் செல்வோரும் அதிகளவு பயன்படுத்தி வந்தனர்.
மாலை நேரங்களில் செயல்பட்ட கேண்டீனையும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். விடுமுறை நாள் மட்டுமின்றி மாலை நேரங்களிலும் பொதுமக்கள் அதிகளவு வந்துசென்றனர். இந்நிலையில், இருமுறை மின் கட்டண நிலுவையால், பூட்டப்பட்ட பூங்கா தற்போது போதிய பராமரிப்பின்றி உள்ளது.
பூங்காவில் உள்ள நிழற்கூரை அருகே பசுமையான புற்கள் இருந்த இடங்களில் தற்போது புதர் செடிகள் வளர்ந்துள்ளன. பூங்காவுக்குள் வளர்ந்த மூங்கில் மரங்கள், முறையாக வெட்டி செதுக்காமல் உள்ளதால் நடந்து செல்வோர் சிரமப்படுகின்றனர்.
பூங்காவை ஏலம் எடுத்தவர் அமைத்த விளையாட்டு உபகரணங்களை, எடுத்துச் சென்ற நிலையில், அந்த இடம் புதர் மண்டி காணப்படுகிறது. நகர மக்கள் ஆர்வத்துடன் பயன்படுத்திய பூங்கா புதர் மண்டியும், அலங்கோலமாக மாறியுள்ளது. எனவே, பூங்காவை பராமரிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
உரிய நடவடிக்கை
நகராட்சி கமிஷனர் கணேசன் கூறுகையில், ''நகராட்சி ஜோதிநகர் பூங்காவை ஏலம் எடுக்க ஒருவர் விண்ணப்பித்துள்ளார். நகராட்சி கவுன்சிலில் முடிவு செய்து ஏலம் விடப்படும். அவர் வாயிலாக பூங்காவை பராமரிக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.