sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவையில் வெறித்தனமாக திரியும் தெருநாய்கள்;25,000 பேருக்கு கடி! மரண பீதியில் நடமாடும் மக்கள்

/

கோவையில் வெறித்தனமாக திரியும் தெருநாய்கள்;25,000 பேருக்கு கடி! மரண பீதியில் நடமாடும் மக்கள்

கோவையில் வெறித்தனமாக திரியும் தெருநாய்கள்;25,000 பேருக்கு கடி! மரண பீதியில் நடமாடும் மக்கள்

கோவையில் வெறித்தனமாக திரியும் தெருநாய்கள்;25,000 பேருக்கு கடி! மரண பீதியில் நடமாடும் மக்கள்

2


ADDED : நவ 03, 2024 11:47 PM

Google News

ADDED : நவ 03, 2024 11:47 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த, 23 வயது இளம்பெண்ணை தெருநாய் கடித்ததால், 'ரேபிஸ்' நோய் தாக்குதலுக்கு உள்ளாகி, சில நாட்களுக்கு முன் உயிரிழந்திருக்கிறார். இதேபோல், கோவை நகர்ப்பகுதியில் மட்டும் தெருநாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, இதுநாள் வரை ஆறு பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

கோவையில் நடந்தது தெருநாய்க்கடியால் ஏற்பட்ட இழப்பு. திருப்பூரில் நடந்தது வேறு விதம். வேலைக்குச் செல்வதற்காக வீட்டில் இருந்து வாகனத்தில் புறப்பட்டுச் சென்ற ஒரு தம்பதி, தெருநாய் குறுக்கே பாய்ந்ததால் தடுமாறி கீழே விழுந்தனர். அவ்வழியாக வந்த லாரி ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது இரு குழந்தைகள் ஆதரவின்றி தவிக்கின்றனர்.

முந்தைய காலங்களில் தெருநாய்கள் கொல்லப்பட்டன. 'ப்ளு கிராஸ்' மற்றும் விலங்கு ஆர்வலர்களின் எதிர்ப்பால், கொல்வது கைவிடப்பட்டது. அதற்கு மாறாக, இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை செய்யப்படுகிறது. இதற்கான செலவினத்தை உள்ளாட்சி அமைப்புகள் செய்கின்றன.

ஆனாலும், போதிய நிதி இல்லாமல் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்வதில்லை. பொருளாதார வசதியுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பெருந்தொகை செலவிட்டு கருத்தடை செய்கின்றனர். ஆனாலும் இனப்பெருக்கம் அதிகரித்து விடுகிறது.

லட்சம் நாய்கள்


சமீபத்தில், கோவை மாநகராட்சி எடுத்த கணக்கெடுப்பில், ஒரு லட்சத்து, 15 ஆயிரம் தெருநாய்கள் இருப்பது தெரியவந்தது. இதுவரை, 25 ஆயிரம் நாய்களுக்கே கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நாய்களுக்கு மூன்று ஆண்டுகளுக்குள் கருத்தடை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாய்க்கு கருத்தடை சிகிச்சை செய்ய 1,650 ரூபாய், மாநகராட்சியால் செலவிடப்படுகிறது. இதன்படி கணக்கிட்டால், கோவையில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்ய மட்டும் 18 கோடியே, 97 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மாநகராட்சி நிர்வாகத்தால் செலவிடப்படும்.

இச்செலவினம் தேவையா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. மனித உயிர் முக்கியமா; விலங்கு உயிர் முக்கியமா என்கிற சிந்தனைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாய சூழல், தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில், கோவை மாநகராட்சி மட்டுமே இவ்ளோ தொகை செலவிடுகிறதென்றால் சென்னை மாநகராட்சி மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை கணக்கிட்டால் தலைசுற்றல் வந்து விடும் போலிருக்கு.

நாய்க்கடியால் பாதிப்பு


இச்சூழலில், தெருநாய்கள் கடித்து சிகிச்சைக்கு வருவோர் பட்டியலை பார்த்தால் மிரள வைக்கிறது. கடந்த ஒன்பது மாதங்களில் (ஜன., - செப்.,) கோவை அரசு மருத்துவமனையில் மட்டும், 15 ஆயிரத்து, 124 பேர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றிருக்கின்றனர். சிகிச்சை பலனின்றி, 4 பேர், இதன் பின் இருவர் என, மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு பொது மருத்துவமனைகளில், 9,881 பேர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இதன்படி, ஒன்பது மாதங்களில் கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டும், 25 ஆயிரத்து, 5 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள் எத்தனை பேர் என்பது இக்கணக்கில் சேராது.

'ரேபிஸ்' பாதிப்பு


தெருநாய் கூட்டத்திலும் வெறி நாய், சொரி நாய்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்களும் காணப்படுகின்றன. இவை கடித்தால், மனித உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது. வெறி நாய், சொரி நாய் கடிக்கும்போது, 'ரேபிஸ்' பாதிப்பு ஏற்படுகிறது. 'ரேபிஸ்' நோய் பாதித்தால், உயிரிழப்பு நிச்சயம் என்ற சூழலே தற்போது வரை உள்ளது.

ஒரு குப்பியில் உள்ள 'ரேபிஸ்' தடுப்பூசி மருந்தை, 5 பேருக்கு செலுத்தலாம். ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு, தனியார் மருத்துவமனையில், 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஐந்து முறை தடுப்பூசி செலுத்த வேண்டுமென டாக்டர்கள் கூறுவதால், தெருநாய்க்கடிக்கு உள்ளானவர், தடுப்பூசிக்கு மட்டும், 2,500 ரூபாய் செலவிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. கோவையில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் செப்., வரை, 25 ஆயிரம் பேருக்கு 'ரேபிஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. ஒரு நபருக்கு ரூ.2,500 வீதம் கணக்கிட்டால், 6 கோடியே, 25 லட்சம் ரூபாய் வரை தடுப்பூசி செலுத்திய வகையில் தமிழக அரசுக்கு செலவாகியிருக்கிறது.

தடுப்பூசி அவசியம்


கால்நடை டாக்டர் வெங்கடேஸ்வரன் கூறுகையில், “நாய்க்கடிக்கும், பருவ மாற்றத்துக்கும் சம்பந்தமில்லை. தெரு நாய் கடித்தால், 'ரேபிஸ்' தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும். முதல் நாள், மூன்றாவது நாள், 14வது நாள், 28வது நாள், 90வது நாள் என, ஒவ்வொருவரும் ஐந்து முறை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். 90வது நாள் செலுத்திக் கொண்டால், ஓராண்டுக்கு பாதுகாப்பானது,'' என்றார்.

சமூக ஆர்வலர் சந்திரன் கூறுகையில், ''தெருநாய்களின் உயிரை பாதுகாப்பதை விட பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம். இவ்விஷயத்தில் தமிழக அரசு கூடுதல் அக்கறை செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருநாய்களை பிடித்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் விடலாம். நாய்களுக்கு என வனம் அமைத்து பராமரிக்கலாம். நாய் கடித்தால் செலவாகும் தொகையை, அதற்கு பயன்படுத்தினால் நாய்களும் பாதுகாப்பாக இருக்கும், மக்களும் நிம்மதி அடைவார்கள். நாய்களை கருணைக் கொலை செய்ய மக்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். நாய் தொல்லை காரணமாக சிலர் கொன்று விடுகின்றனர். பின், பிரச்னைகளில் சிக்கி சிரமப்படுகின்றனர். 'ப்ளு கிராஸ்' அமைப்பு மற்றும் விலங்குகள் ஆர்வலர்கள் தமிழக அரசுடன் இணைந்து தீர்வு காண வேண்டும்,'' என்றார்.

கால்நடைகளும் தப்புவதில்லை!


உடுமலை வட்டார பகுதிகளில், 20 முதல், 30 தெரு நாய்கள் கூட்டமாக சுற்றி வருவதோடு, பொதுமக்களை மட்டுமன்றி, ஆடு, மாடு, கோழிகளையும் கடித்து குதறி வருகின்றன. இரவு நேரங்களில், தோட்டத்துசாளைகளுக்குள் புகுந்து, ஒரே சமயத்தில், 20க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து கொன்றுள்ளன. இதேபோல், மாடுகள், கன்றுக்குட்டிகள் மற்றும் கோழிப்பண்ணைகளுக்குள் புகுந்து, நுாற்றுக்கணக்கான கோழிகளையும் கடித்து கொன்றுள்ளன. கடந்த, 3 மாதத்தில் மட்டும், 200க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் நாய்க்கடிக்கு பலியாகியுள்ளன. கோழிப்பண்ணைகளில் வளர்ந்த, நுாற்றுக்கணக்கான கோழிகளும் இரையாகியுள்ளன.

உடுமலை, மடத்துக்குளம் தாலுகா தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், ''50க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக இருப்பதோடு, இரவு நேரங்களில் வன விலங்குகளை போல் வேட்டையாடுகின்றன. இரு ஆண்டுகளாக, பெரும் பொருளாதார சேதத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்,'' என்றார்.

மனித உயிர்களை காப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் பெருந்தொகையை செலவிட முனைப்பு காட்டும் தமிழக அரசு, ஏற்கனவே நடைமுறையில் இருந்ததைபோல், தெருநாய்களை பிடித்து ஏன் கருணை கொலை செய்யக்கூடாது, என பொது நல அமைப்பினர் கேட்க ஆரம்பித்திருக்கின்றனர். மனித உயிர் முக்கியமா; விலங்கு உயிர் முக்கியமா என்பதே அவர்கள் வைக்கும் வாதமாக இருக்கிறது. அதேநேரம், மனித உயிருக்கு ஆபத்து என்றாலும் கூட, தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தலாமே தவிர, கொல்லக்கூடாது என விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தெருநாய் பிரச்னை தானே என அலட்சியமாக கடந்து செல்லாமல், 'ரேபிஸ்' நோய் பாதிப்புக்குள்ளாகி, மனித உயிர்கள் பலியாகி வரும் சூழல் அதிகரிக்கத் துவங்கியிருப்பதால், இவ்விஷயத்தில், மத்திய - மாநில அரசுகள் கொள்கை ரீதியாக முடிவெடுத்து தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

'தெருநாய்களுக்கு உணவளிப்பதை குற்றமாக அறிவிக்க வேண்டும்'

திருப்பூர், 'வெற்றி' அமைப்பின் நிர்வாகி சிவராம் கூறியதாவது:தெருநாய் கடித்தால் தடுப்பூசி போட வேண்டும்; 'ரேபிஸ்' நோய் பாதித்தால் வைத்தியம் இல்லை என்கின்றனர். மனிதர்களை மட்டுமல்ல... விலங்கினங்களை கடித்தாலும் உயிரிழப்பு ஏற்படும். சமீபகாலமாக, திருப்பூர் மாவட்டம் சிக்கலான பிரச்னையை சந்தித்து வருகிறது. பணி முடிந்து தொழிலாளர்கள் இரவில் செல்லும்போதோ, காலையில் பள்ளிக்கு குழந்தைகளை பெற்றோர் அழைத்துச் செல்லும்போதோ தெருநாய்கள் சண்டையிட்டுக் கொண்டு, ரோட்டுக்கு குறுக்கே வந்து விடுகின்றன. வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து, படுகாயம் அடைகின்றனர். மனித உயிர்களை விட, தெருநாய்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. தெருநாய்களை கொல்ல முடியாது; கருத்தடை மட்டுமே செய்ய முடியும் என உள்ளாட்சி அமைப்பினர் கூறுகின்றனர்.தெருநாய்கள் பாவம் என கருதி, அவற்றுக்கு உணவளிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. சில சமயங்களில் அவர்கள் வரவில்லை எனில், பசியால் கோபமுற்று, அவ்வழியில் செல்வோரை தாக்குகிறது. தெருநாய்க்கு உணவளிப்பதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்க்கோ, வளர்ப்பு பிராணிகளுக்கோ எதிரானவன் அல்ல. அவற்றை விரும்புவோர், தங்களது வீட்டில் பாதுகாப்பாக வளர்க்க வேண்டுமே தவிர, மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் வகையில், தெருவில் விடக்கூடாது.பிராணிகளை வதைக்கக் கூடாது என கூறுபவர்கள், தெருநாய்களை அவர்களது வீட்டில் பராமரித்துக் கொள்ள வேண்டும். ரோடு என்பது பொதுமக்கள் பயன்பாட்டுக்கானதே தவிர; நாய்கள் பயன்பாட்டுக்கானது அல்ல. அதனால், தெருநாய்களுக்கு உணவளிப்பதை குற்றச்செயலாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். தற்போது சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 'வாக்கிங்' செல்லும்போது கூட, குச்சி எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது; நான்கு நாய்கள் இருந்தால் பயப்படுகின்றன. நாற்பது நாய்களாக கூட்டமாக இருந்தால், உயிருக்கே ஆபத்து. மனிதர்களுக்கு பாதுகாப்பு தேவை. தெருநாய் தொல்லைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.



இதோ... நாய்க்கடி புள்ளிவிபரம்!

 உடுமலை அரசு மருத்துவமனைக்கு மட்டும், நாளொன்றுக்கு, சராசரியாக, 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர். மாதத்துக்கு சராசரியாக, 350 முதல், 400 பேரும், மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு, 250 முதல், 300 பேரும், நாய்க்கடி சிகிச்சைக்கு வருகின்றனர். உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நாய்க்கடிக்கு ஊசி செலுத்தப்படுகிறது. மூன்று வட்டாரத்திலும், பாதிக்கப்பட்டு வருவோர் எண்ணிக்கை, மாதம்தோறும், 800 பேர் வரை உள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நீலகிரி மாவட்டம், ஊட்டி, குன்னுார், கூடலுார், பந்தலுார், கோத்தகிரி பகுதியில் தெருநாய் பிரச்னை உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் செப்., வரை 498 பேர் தெருநாய்கள் மற்றும் வீட்டு வளர்ப்பு நாய்கள் கடித்து, ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில், 12 ஆயிரத்து, 475 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நாளொன்றுக்கு, 45 முதல் 55 பேர் நாய் கடித்து சிகிச்சைக்கு வருகின்றனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்தாண்டு, 2,649 பேருக்கும், நடப்பாண்டு கடந்த மாதம் வரை, 2,021 பேரும் வெறிநாய் கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.



'பெண் நாய்களுக்கு கருத்தடை கஷ்டம்'

கோவை மாநகராட்சி நகர் நல அலுவலர் (பொறுப்பு) பூபதியிடம் கேட்டதற்கு, ''தெருநாய்களை கருணைக்கொலை செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை. கருத்தடை சிகிச்சை செய்து, மூன்று நாட்கள் பராமரித்து, ஏற்கனவே பிடித்த இடத்திலேயே மீண்டும் விட வேண்டுமென சுப்ரீம் கோர்ட் கூறியிருக்கிறது. அதை மீற முடியாது. தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த, கருத்தடை செய்வதுதான் ஒரே வழி. கோவையில் மூன்று ஏஜென்சிகள் உள்ளன; மாதத்துக்கு தலா, 1,000 வீதம், 3,000 நாய்களுக்கு சிகிச்சை அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஆண்டுக்கு, 36 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்தால், மூன்று ஆண்டுகளுக்குள் கட்டுப்படுத்தி விடலாம் என திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.மேலும், அவர் கூறுகையில், ''ஆண் நாய்களுக்கு கருத்தடை செய்வது எளிது. பெண் நாய்களுக்கு கருத்தடை செய்வது கஷ்டம்; ஒரு மணி நேரமாகும். ஆண் நாய்களை மூன்று நாட்கள் பராமரித்து, வெளியே விட்டு விடலாம்; பெண் நாய்களை ஒரு வாரம் வரை பராமரிக்க வேண்டிய சூழல் வரும். என்றாலும் கூட, பெண் நாய்களுக்கும் கருத்தடை செய்கிறோம்,'' என்றார்.



'உணவு, தண்ணீர் கிடைத்தால் கடிக்காது'

விலங்குகள் நல செயல்பாட்டாளர் செலினா கூறுகையில், நாய்களுக்கு சாப்பாடு, தண்ணீர் கிடைக்காததால் ஆக்ரோஷம் அடைந்து மனிதர்களை கடிக்கிறது. அதற்கு உணவும், மனிதர்களால் தொல்லையும் கொடுக்காமல் இருந்தால் எதுவும் செய்யாது. நோய்வாய்ப்பட்ட சில நாய்கள் கடிக்க வரலாம். நாய்களுக்கு உணவு, தண்ணீர் கிடைக்கக்கூடிய பகுதிகளில், கடித்ததாக தகவல் இல்லை. இனப்பெருக்க காலங்களில் ஆண் நாய்களுக்கு இணை கிடைக்காமல் ஆக்ரோஷமாக இருக்கும்,'' என்றார்.








      Dinamalar
      Follow us