/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய கட்டடங்களுக்கு 'சீசனிங் டைம்' விளக்குகிறார் கட்டுமான பொறியாளர்
/
புதிய கட்டடங்களுக்கு 'சீசனிங் டைம்' விளக்குகிறார் கட்டுமான பொறியாளர்
புதிய கட்டடங்களுக்கு 'சீசனிங் டைம்' விளக்குகிறார் கட்டுமான பொறியாளர்
புதிய கட்டடங்களுக்கு 'சீசனிங் டைம்' விளக்குகிறார் கட்டுமான பொறியாளர்
ADDED : மார் 14, 2026 07:00 AM

நாங்கள் புதிதாக வாங்கிய பழைய வீட்டின் கட்டடத்தை இடித்துள்ளோம். தற்போது எங்கள் இடத்தில் சுமார் 2 அடி உயரத்திற்கு கட்டடக் கழிவுகள் உள்ளன. இவற்றை பேஸ்மென்ட் பில்லிங்கிற்கு பயன்படுத்தலாமா?:
-சரவணன்: கணபதி
கட்டட கழிவுகளை நேரடியாக பயன்படுத்தாமல், முதலில் அவற்றை சரியான முறையில் தரம் பிரித்து பெரிய துண்டுகளை சிறிய துண்டுகளாக உடைத்து தயாராக்க வேண்டும். இவ்வாறு சீரமைக்கப்பட்ட கழிவுகளை, பேஸ்மென்ட் பில்லிங் பணிகளில் பயன்படுத்தலாம்.
அதை பயன்படுத்தும் போது அடுக்கடுக்காக பரப்பி நன்றாக நெருக்கி உறுதியாக அமைக்க வேண்டும். இதை சரியான முறையில் செய்தால் கட்டட கழிவுகளை மறுபயன்படுத்தி செலவை குறைத்தும், சுற்றுச்சூழலுக்கும் பயனுள்ளதாகவும் பயன்படுத்த முடியும்.
எங்கள் வீடு கட்டி சுமார் 40 ஆண்டுகள் ஆகின்றன. மொட்டை மாடியில் உள்ள தளம் வெடித்து சிதிலமடைந்துள்ளது. அங்குள்ள சுருக்கியை எடுத்து விட்டு புதிய தளம் போடுவது நல்லதா அல்லது சுருக்கியின் மேல் சிமென்ட் தளம் போடுவது நல்லதா?:
-நிஷாந்த்: ராமநாதபுரம்
மொட்டை மாடியின் மேற்புற தளம் வெடித்து, சிதிலமடைந்திருந்தால் சேதமடைந்த தளத்தை முழுமையாக அகற்றுவது முதலில் அவசியம். அதன் கீழே இருக்கும் சுருக்கி நல்ல நிலையில் இருந்தால் அதை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. சுருக்கியின் மேற்பரப்பை சுத்தம் செய்து தேவையான திருத்தங்களை செய்து, அதன் மேல் சரியான முறையில் புதிய சிமென்ட் தளம் அல்லது கூலிங் டைல்ஸ் அமைத்து கொள்ளலாம். இவ்வாறு சரியான முறையில் புதுப்பித்து அமைத்தால் மொட்டை மாடி நீர்ப்புகா தன்மையுடனும் நீண்ட ஆயுட்காலத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்கும்.
எங்கள் கட்டடம் வெளிப்புற மற்றும் உள்புற பூச்சுக்கு தயாராக உள்ளது. தற்போது சந்தைகளில் 'ரெடிமேட் பிளாஸ்டர்'கள் கிடைக்கின்றன. அது வலிமையானதாகவும் சரியான தேர்வாகவும் இருக்குமா?:
-வருணன்: அன்னூர்
தொழில்துறையின் வளர்ச்சியின் காரணமாக தற்போது மேம்படுத்தப்பட்ட ரெடிமேட் பிளாஸ்டர்கள் சந்தையில் கிடைக்கின்றன. இவை தரமான மூலப்பொருட்களுடன் தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்படுவதால், பல நேரங்களில் ஒரே மாதிரியான தரத்தையும் நல்ல ஒட்டுதன்மையையும் வழங்குகின்றன. ரெடிமேட் பிளாஸ்டரை பயன்படுத்தும் போது, தயாரிப்பு நிறுவனத்தின் வழிமுறைகளை முறையாக பின்பற்றி பயன்படுத்தினால் கட்டுமானத்தின் தரம் மேம்படும். வேலை நேரச்சிக்கனமும் பொருட்செலவிலும் பயன் கிடைக்கும்.
புதிதாக கட்டிய வீட்டின் சுவற்றில் இரண்டு கோட் பட்டி பார்த்து ஒரு கோட் பிரைமர் அடித்த பின் சில இடங்களில் சிறு,சிறு துளைகள் தோன்றுகின்றன. இது எதனால் ஏற்படுகிறது?
-சஞ்சய்: அவிநாசி
புதிதாக கட்டிய வீடுகளில் உடனடியாக பட்டி வேலை செய்வது சரியான முறையாக இருக்காது. புதிய கட்டடங்களுக்கு பொதுவாக ஆறு மாதங்கள் வரை 'சீசனிங் காலம்' தேவை. அதன் பிறகு பெயின்டிங் மற்றும் பட்டி வேலைகளை செய்வது சிறந்ததாக இருக்கும்.
பட்டி வேலை செய்யும்போது இரண்டு திசைகளில், இரண்டு முறை பட்டி வேலை செய்ய வேண்டும். அதன் பிறகு சுவற்றில் உள்ள சிறிய சந்து மற்றும் துளைகளை சரியாக அடைத்து 'சேண்ட் பேப்பர்' கொண்டு நன்றாக தேய்த்து மேற்பரப்பை சமப்படுத்த வேண்டும்.
பின்னர்தான் 'பிரைமர்' பூச வேண்டும். பிரைமர் அடித்தபின் சில இடங்களில் சிறிய துளைகள் தென்பட்டால், அந்த இடங்களில் 'பேட்ச் பட்டி' போட்டு மீண்டும் தேய்த்து, அதன் பிறகு பிரைமர் அல்லது பெயின்ட் பூசினால் மேற்பரப்பு நன்றாகவும் சமமாகவும் இருக்கும்.
இயற்கை முறையில் வீடு கட்ட விரும்புகிறோம். ஆலோசனை வழங்கவும்.:
-வசந்தகுமாரி: காரணம் பேட்டை
பண்டைய காலம் தொட்டு நமது தமிழர்கள் கட்டுமான முறைகளில் அறிவியல் பார்வையை புகுத்தியுள்ளனர். அந்த காலத்தில் இயற்கை வளங்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலுடன் ஒத்துப்போகும் வகையில் கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டன.
காலப்போக்கில் நவீன கட்டுமான முறைகள் அதிகரித்ததால், இயற்கை கட்டுமான முறைகள் சற்றே பின்தங்கியிருந்தன. கடந்த சில ஆண்டுகளாக இயற்கை கட்டுமானத்தை நாடுபவர்கள் அதிகரித்து வருகின்றனர்.
இயற்கை கட்டுமான முறைகளை பயன்படுத்துவதன் வாயிலாக கரியமில வாயு வெளியேற்றம் குறையும். அந்தந்த பகுதியின் இயற்கை சூழலுக்கு ஏற்ப சுகாதாரமான, குளிர்ச்சியான மற்றும் வாழ்வதற்கு உகந்த கட்டடங்களை அமைத்துக்கொள்ள முடியும்.
-விஜயகுமார்: முன்னாள் தலைவர்: கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கம் (காட்சியா).:

