திடக்கழிவு மேலாண்மை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
திடக்கழிவு மேலாண்மை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஆக 21, 2026 02:10 PM
வால்பாறை: திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், நகராட்சி சார்பில் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமையில் நடந்தது.
நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார் திடக்கழிவு மேலாண்மை குறித்து பேசும் போது, ‘‘வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பை உள்ளிட்ட கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக்கழிவுகள், சிறப்பு வகை கழிவுகள் என நான்கு வகையாக பிரித்து, துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்த்து, துணி பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
படிக்கும் வயதில் மாணவர்கள் புகையிலை மற்றும் போதை பொருட்களுக்கு ஆளாகக்கூடாது. படிப்பில் மட்டுமே முழுக்கவனம் செலுத்த வேண்டும். பள்ளியில் உள்ள நுாலகத்தை மாணவர்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்,’’ என்றனர்.
நிகழ்ச்சியில், நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன், துாய்மை பாரதம் திட்ட மேற்பார்வையாளர்கள் ராம்குமார், ராகவன் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.
