/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தங்களை வார்த்தெடுத்த பள்ளிக்கு நன்றிக்கடன் செலுத்திய மாணவர்கள்
/
தங்களை வார்த்தெடுத்த பள்ளிக்கு நன்றிக்கடன் செலுத்திய மாணவர்கள்
தங்களை வார்த்தெடுத்த பள்ளிக்கு நன்றிக்கடன் செலுத்திய மாணவர்கள்
தங்களை வார்த்தெடுத்த பள்ளிக்கு நன்றிக்கடன் செலுத்திய மாணவர்கள்
ADDED : மே 19, 2025 11:26 PM

ஆனைமலை; ஆனைமலை அருகே, பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், தங்களது சொந்த செலவில் பள்ளிக்கு வர்ணம் பூசி அழகுப்படுத்தினர். பள்ளியை விட்டுச் சென்றாலும், பள்ளி பராமரிப்பு செய்த மாணவர்களை, ஆசிரியர்கள் பாராட்டினர்.
ஆனைமலை அருகே பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளி, 190 மாணவர்களுடன் செயல்படுகிறது. இங்கு கல்வியுடன் மாணவர்களுக்கு பாரம்பரிய கலைகள் உள்ளிட்ட மற்ற திறமைகளையும் வளர்க்க ஆசிரியர்கள் வழிகாட்டி ஊக்கப்படுத்துகின்றனர்.
நடப்பாண்டுடன் சேர்த்து, தொடர்ந்து 10 ஆண்டுகளாக இப்பள்ளி மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர். நடப்பாண்டு, முதல் மதிப்பெண், 485 ஆக உள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில், 10 பேர், பள்ளிக்கு வந்தனர்.பள்ளி வகுப்பறைகளில் அமர்ந்து, பள்ளி நாட்களில் நடந்த நினைவுகளை பகிர்ந்தனர். அதன்பின், சொந்த செலவில் பெயின்ட் வாங்கி வந்து, அவர்கள், படித்த இரண்டு வகுப்பறைகளுக்கும் பெயின்ட் அடித்தனர். இருக்கைகளை அழகாக அடுக்கினர். இவர்களது செயலை பள்ளி தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி பாராட்டினார்.
பள்ளி தமிழாசிரியர் பாலமுருகன் கூறுகையில், ''வெற்றி என்பது மதிப்பெண்கள் பெறுவதில் மட்டும் முடிந்து விடுவதில்லை. இதுபோன்ற மிகச்சிறந்த பண்புகளை கற்றுக்கொடுப்பதும், அவற்றை மாணவர்கள் பின்பற்றுவதிலும் தான் அமைந்துள்ளது.
இங்கு பயின்ற மாணவர்கள், அவர்களால் முடிந்த செயலை பள்ளிக்கு செய்து சென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. படித்த பள்ளியை மறக்காமல் அவர்கள் செய்த செயல் மனதை குளிர வைத்துள்ளது,'' என்றார்.