/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்கள் திறமைகளை வெளிபடுத்தி அரையிறுதிக்கு தகுதி
/
மாணவர்கள் திறமைகளை வெளிபடுத்தி அரையிறுதிக்கு தகுதி
மாணவர்கள் திறமைகளை வெளிபடுத்தி அரையிறுதிக்கு தகுதி
மாணவர்கள் திறமைகளை வெளிபடுத்தி அரையிறுதிக்கு தகுதி
ADDED : நவ 19, 2025 03:30 AM

கோவை: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், நிர்மலா மாதா கான்வென்ட் பள்ளி, ஐசிஎஸ்இ / ஐஎஸ்சி மற்றும் கலைமகள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று, அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மாணவர்களின், தமிழ், ஆங்கிலம் மட்டுமன்றி அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் பகுத்தறிவு, சிந்தனையாற்றல் மற்றும் பொது அறிவு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. படிப்பின் மீது ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், தினமலர் சார்பில் இத்தகைய வினாடி-வினா போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
பள்ளி அளவிலான சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறுகின்றன. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் எட்டு அணிகள் இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.
நிர்மலா மாதா கான்வென்ட் பள்ளி, ஐசிஎஸ்இ / ஐஎஸ்சி குனியமுத்தூரில் உள்ள இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 250 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ-மாணவிகள் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 'ஏ' அணி வெற்றி பெற்றது.
அந்த அணியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஜோனாஸ் மற்றும் தேஜாஸ் வர்கீஸ் ஜேக்கப் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளி முதல்வர் மேபிள் (எஸ்ஏபிஎஸ்), இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
கலைமகள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் உள்ள இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 50 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ-மாணவிகள் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 'ஜி' அணி முதலிடம் பெற்றது.
அந்த அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி ஹர்ஷா பாத்திமா மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவி பூவிதா ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளி தாளாளர் குப்புராஜ், கல்வி இயக்குனர் அமிர்தம், முதல்வர் தேவி ஆகியோர் இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
கிப்ட் ஸ்பான்சர்கள் 'தினமலர்' நாளிதழுடன் எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், சத்யா ஏஜென்சிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகியவை கிப்ட் ஸ்பான்சர்களாக இணைந்துள்ளன.

