UPDATED : ஜூன் 04, 2026 04:45 PM
ADDED : ஜூன் 04, 2026 04:41 PM
பொள்ளாச்சி: தமிழகத்தில், தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, கோவை மாவட்ட கலெக்டர், தென்மேற்கு பருவமழை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகத்துக்கு அறிவுரை வழங்கினார்.
அதன்படி, சின்னாம்பாளையத்தில் இருந்து கிருஷ்ணா குளம் வரை செல்லும் நீரோடையை துார்வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இப்பணிகளை, சப்-கலெக்டர் ராமகிருஷ்ணசாமி ஆய்வு செய்தார். ஆய்வின் போது, நகராட்சி தலைவர் சியாமளா, கமிஷனர் குமரன், நகர்நல அலுவலர் தாமரைக்கண்ணன், நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர். பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
நகராட்சி கமிஷனர் கூறுகையில், 'சின்னாம்பாளையத்தில் இருந்து ஓடை துார்வாரும் பணி நடக்கிறது. நகராட்சி பகுதியில் உள்ள பெரிய வடிகால், நடுத்தர வடிகால் ஆகியவற்றை நகராட்சி பணியாளர்களை கொண்டு துார்வாரி பிளாஸ்டிக் அகற்றம் செய்யப்படுகிறது. மேலும், நகராட்சி பகுதிகளில் குப்பை குவியல்கள் இல்லாமல் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது,' என்றார்.
